Last Updated : 03 Jan, 2022 01:50 PM

21  

Published : 03 Jan 2022 01:50 PM
Last Updated : 03 Jan 2022 01:50 PM

எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் பாஜகவைத் தோற்கடிக்க முடியாது: வைகோவுக்கு அண்ணாமலை பதிலடி

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள  வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பாஜக தலைவர் அண்ணாமலை.

மதுரை

மதுரை: எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் பாஜகவைத் தோற்கடிக்க முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை ஒட்டி, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கலை கலாச்சாரப் பிரிவுத் தலைவர் காயத்ரி ரகுராம், மதுரை மாவட்டத் தலைவர் சரவணன் ஆகியோர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கருப்பு, சிவப்பு, நீலம் சேர்ந்து பாஜகவைத் தோற்கடிக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசியுள்ளார். அவர் வேண்டுமானால் நிறத்தை வைத்து அரசியல் செய்யட்டும். பாஜக அப்படியில்லை. பாஜகவுக்கு கருப்பு, சிவப்பு, நீலம் மட்டுமல்ல அனைத்து நிறங்களும் தேவை. கருப்பு, சிவப்பையும் நாங்கள் ஒதுக்கமாட்டோம். அனைத்து மக்களையும் சேர்த்தே அரசியல் செய்ய பாஜக நினைக்கிறது.

காங்கிரஸ் ஒரு காற்றடைத்த பலூன். அதனால்தான் ராகுல் காந்தி அவ்வப்போது எங்காவது பறந்து சென்று விடுகிறார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதில் சொல்ல வேண்டும். இந்தியாவில் காங்கிரஸ் முடித்து வைக்கப்பட்டு வருகிறது. விரைவில் தமிழகத்திலும் காங்கிரஸ் முடிவுக்கு வரும்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒரே அணியில் சேர வேண்டும் என வைகோ பேசியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் 2019 தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து பாஜகவை எதிர்த்தன. ஆனால், அந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனால் எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் பாஜகவைத் தோற்கடிக்க முடியாது. இது தெரிந்துதான் தற்போது உத்தரப் பிரதேசத்தில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாகத் தேர்தலைச் சந்திக்கின்றன.

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜகவின் பொங்கல் நிகழ்ச்சி மாநில அரசின் கரோனா கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றி நடத்தப்படும். மாநில அரசின் கரோனா கட்டுப்பாடுகளை பாஜக ஒரு சதவீதம் கூட மீறாது. பிரதமர் மோடி பொங்கல் பண்டிகையில் பங்கேற்பது தமிழ்க் கலாச்சாரத்துக்குப் பெருமை சேர்ப்பதாகும்.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்பதில் பாஜகவுக்கு மாற்றுக் கருத்து இல்லை. இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் சிந்தியாவின் கருத்தைத் திரித்துப் பரப்பி வருகின்றனர். தேர்தலின்போது வாக்குறுதி அளிக்காத நிலையில் பல மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளன. தமிழக அரசு இன்னும் குறைக்காமல் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என திமுகவினர் நினைக்கின்றனர். ஆனால் நிதியமைச்சர் மறுப்பு தெரிவிக்கிறார். இதில் திமுகவில் குழப்பமும், முரண்பாடும் உள்ளது" என்று அண்ணாமலை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x