Published : 18 Dec 2021 12:05 PM
Last Updated : 18 Dec 2021 12:05 PM

மதுரையில் தவறவிட்ட ரூ.2.93 லட்சம் விருதுநகர் முதியவரிடம் ஒப்படைப்பு

மதுரை பாண்டி கோயில் மண்டபத்தில் தவறவிட்ட ரூ.2.93 லட்சத்தை விருதுநகர் முதியவரிடம் காவல் ஆய்வாளர் ஒப்படைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், மட்டப்பாறையைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் கோவை காவல்கிணறு பகுதியில் காவல்துறையில் பணிபுரிகிறார். தனது மகனுக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக மதுரை பாண்டி கோயிலுக்கு குடும்பத்தினருடன் டிச.16-ம் தேதி வந்தார்.

நிகழ்ச்சி முடிந்து காரில் சொந்த ஊருக்குச் சென்றார். அப்போது தங்களது உடைமைகளுடன் கூடுதலாக இருந்த கட்டைப் பை ஒன்றில் ரூ.2,93,707 இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மதுரையைச் சேர்ந்த காவல்துறை நண்பர் ஒருவர் மூலம் மாட்டுத்தாவணி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.

காவல் ஆய்வாளர் அனுராதா விசாரித்தார். இந்நிலையில், பாண்டி கோயிலில் மண்டபம் ஒன்றில் விருந்து சாப்பிட்டபோது பணத்துடன் கட்டைப் பையை தவறவிட்டதாக விருதுநகரைச் சேர்ந்த அழகர்சாமி(65) என்பவர் புகார் அளித்திருந்தார்.

விசாரணையில், அவர் தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டில் இருந்த ரூ.2.93 லட்சத்தை எடுத்துக் கொண்டு பாண்டி கோயிலுக்கு வந்து, பாண்டிராஜன் நடத்திய விருந்தில் சாப்பிட்டபோது, பணத்தை தவறவிட்டது தெரிந்தது. அதன் பின்னர் அவரிடம் ரூ.2.93 லட்சத்தை காவல் ஆய்வாளர் அனுராதா ஒப்படைத்தார். எஸ்.ஐ. ராஜூ உடன் இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x