Published : 23 Nov 2021 04:06 PM
Last Updated : 23 Nov 2021 04:06 PM

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி; தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம்: மாசு கட்டுப்பாடு வாரியம்

கோப்புப் படம்

சென்னை

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பை, தமிழக அரசு 25.06.2018 நாளிட்ட அரசாணை எண்.84-ல் வெளியிட்டது.

இதன்படி, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களைக் கட்டப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள் / பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தெற்கு மண்டலம்) பிளாஸ்டிக் தடையைக் கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர்களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்குத் தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன.

இத்தடை ஆணையைச் செயல்படுத்த, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவற்றுள், மாவட்ட சுற்றுச்சூழல் குழுக் கூட்டங்கள், மாவட்டந்தோறும் பெருந்திரள் விழிப்புணர்வுப் பேரணிகள், சமூக ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு, தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் அறிவிப்புப் பதாகைகள் நிறுவுதல் போன்றவை மூலம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஆய்வுகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து மூடுதல் - உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. இருப்பினும் குடியிருப்பு/ வணிக நிறுவனங்களுக்குள் ஒரு சிறிய இடத்தில் சட்டவிரோதமாகச் செயல்படும் இத்தகைய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. இந்த உற்பத்தியாளர்களில் பெரும்பாலானவர்கள், எந்த அரசுத் துறையிடமும் முறையான பதிவு மற்றும் அனுமதி இல்லாமல் தற்காலிகமாகச் செயல்பட்டு வருகின்றன.

எனவே சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள், சட்டவிரோதமாக இயங்கும் அத்தொழிற்சாலைகள் குறித்த தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புகார்களைத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அந்தந்த மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர்களிடம் தெரிவிக்கலாம். அவர்களுடைய தொடர்பு விவரங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்தில் (https://tnpcb.gov.in/contact.php) கொடுக்கப்பட்டுள்ளன. புகார்களை மின்னஞ்சல் / கடிதம் / தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்யலாம். புகார் அளிப்பவர்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் முதலியவற்றை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொடுப்பதைத் தடுக்க முடியும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் பங்களிக்கும் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்களுக்கு, அவர்களின் பங்களிப்பிற்காகப் பாராட்டும் வெகுமதியும் அளிக்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியத் தன்மை கண்டிப்பாகப் பராமரிக்கப்படும்."

இவ்வாறு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x