Published : 20 Nov 2021 03:06 AM
Last Updated : 20 Nov 2021 03:06 AM

தமிழகம், புதுவையில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம்

சென்னை

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை 3 முதல் 4.30 மணிக்குள் சென்னை, புதுச்சேரி இடையேகரையைக் கடந்தது. இதன் தாக்கத்தால் தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக 5 இடங்களில் அதிகனமழையும், 37 இடங்களில் மிககனமழையும், 66 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்ச மழை அளவாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கோலியனூர், வல்லம், வளவனூர் ஆகிய இடங்களில் தலா 22 செமீ, மணம்பூண்டியில் 21 செமீ மழை பதிவாகியுள்ளது.

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக் கூடும். இதன் காரணமாக20-ம் தேதி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.

21-ம் தேதி அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

22, 23-ம் தேதிகளில் தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x