Published : 07 Nov 2021 09:41 AM
Last Updated : 07 Nov 2021 09:41 AM

முல்லை பெரியாறு விவகாரம்; பாஜக போராட்டத்துக்கு ஆதரவு: ஜி.கே. வாசன்

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முறையாக செயல்படாத தமிழக அரசை கண்டித்து பாஜக நாளை நடத்தும் போராட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில். “

தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முறையாக செயல்படாததை கண்டித்து - பா.ஜ.க சார்பில் நாளை 8 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்திற்கும் மற்றும் அ.தி.மு.க சார்பில் நாளை மறுநாள் 9 ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கும் த.மா.கா தார்மீக ஆதரவு அளிக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை தண்ணீரை திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக அ.தி.மு.க சார்பில் நாளை மறுநாள் 9 ஆம் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு த.மா.கா தார்மீக ஆதரவு அளிக்கிறது.அதே போல முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக பா.ஜ.க சார்பில் நாளை 8 ஆம் தேதி தேனியில் நடைபெறும் முற்றுகையிடும் போராட்டத்திற்கும் த.மா.கா தார்மீக ஆதரவு அளிக்கிறது.

தமிழகத்துக்கு உரிய முல்லைப் பெரியாறு அணையின் நீரை பெற வேண்டும். மேலும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். தமிழ் நாட்டில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் விவசாயத்திற்கும் மற்றும் மக்களின் குடிநீர் தேவைக்கும் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீர்.

தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தால் மட்டும் போதாது, நமது மாநிலத்திற்கு உரிய நீரை பெறுவதில் அக்கறை காட்ட வேண்டும். அதனை விடுத்து கேரளாவிற்கு முல்லைப் பெரியாறு அணையின் நீரை திறந்து விடுவதில் அவசரம் காட்டுகிறது.

முல்லைப் பெரியாற்றில் 138.5 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் 136 அடி இருக்கும் போதே தண்ணீர் திறக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையில் 136 அடியில் தண்ணீரை நிறுத்துவதால், 5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு கிடைக்கும் பட்சத்தில் தமிழக விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் போதுமானதல்ல. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை சம்பந்தமாக தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை அ.தி.மு.க சார்பில் கண்டித்து வரும் 9 ஆம் தேதி தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

மேலும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் உரிமை பறிபோகிறது, விவசாயத்திற்கு பயனளிக்காது என்பதால் பா.ஜ.க. விவசாய அணி சார்பில் தேனி மாவட்டத்தில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது.

அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்திற்கு த.மா.கா சார்பில் தார்மீக ஆதரவு கொடுத்து, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு முழு கவனம் செலுத்தவும், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெறவும், மாநில உரிமையை நிலைநாட்டவும் வலியுறுத்துவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x