Published : 07 Nov 2021 03:07 AM
Last Updated : 07 Nov 2021 03:07 AM

நவ.11, 12-ம் தேதிகளில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை; பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார்: வார்டு வாரியாக பணிக் குழுக்கள் அமைப்பு

சென்னை

வட கடலோர மாவட்டங்களில் வரும் 11, 12 தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழைக் காலத்தில் சென்னைக்கு சராசரியாக 43 செமீ, வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 76 செமீ மழைகிடைக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் 66 செமீ மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தை விட 23 செமீ அதிகம். இதனால் மாநகரப் பகுதியில் உள்ள 210 நீர்நிலைகளிலும் இப்போதே நீர் நிறைந்துள்ளது. நிலமும் தனது நீர் உறிஞ்சும் திறனில் பெரும்பகுதியை எட்டிவிட்டது. இதற்கு மேல் மழை பெய்தால், அது வெள்ளமாக மாறவும் வாய்ப்புள்ளது.

இந்தச் சூழலில் வங்கக் கடலில் வரும் 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, மேலும் வலுப்பெற்று வட தமிழகம் நோக்கிநகரக்கூடும் என்றும், அதனால் சென்னை உள்ளிட்ட வட கடலோரமாவட்டங்களில் 11, 12 தேதிகளில்அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் பருவமழையை எதிர்கொள்ள எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்துமாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மழைநீர் வழிந்தோட வசதியாக,18 கால்வாய்களில் தூர் வாரி, நீரில் மிதக்கும் ஆகாயத்தாமரைச் செடிகள், கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. சுமார் 1,700 கிமீ நீள மழைநீர் வடிகால்களில் தூர் வாரும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், மின் வாரியம், காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறுதுறைகளைச் சேர்ந்த தலா 10 பேர் கொண்ட பணிக் குழுக்கள் 200 வார்டுகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.

ரிப்பன் மாளிகையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதை 1913 என்ற இலவச தொலைபேசி எண் மற்றும் 044 25619206, 25619207, 25619208 ஆகிய எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம். 22 சுரங்கப் பாலங்களில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்றபோதிய நீர் இறைக்கும் இயந்திரங்கள், டீசல் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாலைகளில் விழும் மரங்களை அகற்ற 360 மரம் அறுக்கும் சிறு இயந்திரங்கள், 11 மின் அறுவை இயந்திரங்கள் ஏற்கெனவே சோதனை ஓட்டமாக இயக்கி பார்க்கப்பட்டு தயாராக உள்ளன. இரவில் மின்சாரம் தடைபட்டால் இப்பணிகளை மேற்கொள்ள 18 நடமாடும் உயர் கோபுர மின்விளக்குகளும் தயாராக உள்ளன. அதிகஅளவு நீர் தேங்கும் இடங்களாக 109 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்குள்ள பொதுமக்களை மீட்க மீன்வளத்துறை உதவியுடன் படகுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பொதுமக்களை தங்கவைக்க 169 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் அனைத்தையும் கண்காணிக்க மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். எனவே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x