Published : 04 Nov 2021 03:08 PM
Last Updated : 04 Nov 2021 03:08 PM

நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கு ரூ.4.53 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

நரிக்குறவர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அருகில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்.

சென்னை

திருக்கழுக்குன்றம் அருகே நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை இன்று மு.க.ஸ்டாலின் வழங்கினார். அவர்களின் குடியிருப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் வாழ்வாதாரம் உயர்த்தப்படும் என உறுதியளித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (4.11.2021) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார். மேலும், கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்ட முன்மொழிவு ஒப்புதல், அங்கன்வாடி மற்றும் பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணைகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கான ஆணை ஆகியவற்றையும் வழங்கினார்.

முதல்வரின் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 81 நபர்களுக்கு ரூ.3.52 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனைப் பட்டாக்கள், 6 நபர்களுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகள், 21 நபர்களுக்கு குடும்ப அட்டைகள், 18 நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள், 88 நபர்களுக்கு இருளர் (ST) சாதிச் சான்றிதழ்கள், 34 நபர்களுக்கு நரிக்குறவர் (MBC) சாதிச் சான்றிதழ்கள், 34 நபர்களுக்கு நரிக்குறவர் நல வாரிய அட்டைகள், 25 நபர்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டைகள், சுயவேலை வாய்ப்பை உருவாக்க செயற்கை முறை ஆபரணங்கள் தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்க 18 நபர்களுக்கு பயிற்சி ஆணைகள், முத்ரா திட்டத்தின் கீழ் 12 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சம் கடனுதவி, சிறுதொழில் செய்வதற்கான வங்கிக் கடன் திட்டத்தின் கீழ் 33 நபர்களுக்கு ரூ.10,000/- வீதம் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கடனுதவி, 75 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முன்மொழிவு ஒப்புதல், மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷன் (MAPS) நிறுவனத்தின் மூலம் பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் புதிதாக அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு கூடுதலாக இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணை மற்றும் பேரூராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள ஆணை, என மொத்தம் 282 நபர்களுக்கு ரூ.4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளைத் தமிழக முதல்வர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நன்றி தெரிவித்துப் பேசிய பயனாளிகள் பவானி மற்றும் அஸ்வினி ஆகியோர் முதல்வர் தங்கள் இல்லங்களுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். அவர்களது அழைப்பினை ஏற்று, தமிழ்நாடு முதல்வர் அவர்களது இல்லங்களுக்கு நேரில் சென்று, குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் நரிக்குறவர் மற்றும் இருளர் குடியிருப்புகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, அவர்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

வாழ்வாதாரம் உயர்த்தப்படும்: முதல்வர் உறுதி

மேலும், பூஞ்சேரி ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம் மற்றும் சாலை வசதிகளை முழுமையாக ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, முதலமைச்சரின் தனிப் பிரிவு சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப.,செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) மரு.எம்.சுதாகர், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சித் தலைவர் து.செம்பருத்தி, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் இதயவர்மன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x