Last Updated : 11 Jun, 2014 09:00 AM

 

Published : 11 Jun 2014 09:00 AM
Last Updated : 11 Jun 2014 09:00 AM

சென்னையில் தெரு நாய்கள் எத்தனை?- கணக்கெடுப்பு முடிந்தது

சென்னை மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் எத்தனை தெரு நாய்கள் இருக்கின்றன என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் ஜூன் 15-ம் தேதிக்கு பிறகு வெளியிடப்படவுள்ளது.

தெரு நாய்களுக்கான கணக்கெடுப்பை சென்னை மாநகராட்சி கடந்த மே 30-ம் தேதி நடத்தியது. துப்புரவு ஊழியர்களைக் கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘4 தெருக்களுக்கு 2 துப்புரவு ஊழியர்கள் என்ற அளவில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. காலை 6 மணிக்கு அவர்கள் தங்களது அன்றாட பணிக்கு சென்றபோதே இந்த கணக்கெடுப்பையும் நடத்தினர். ஒரே நாளில் அனைத்து இடங்களிலும் நடத்தப்பட்டதால், ஒரே நாயை 2 முறை கணக்கெடுத்திருக்க வாய்ப்பு குறைவு’’ என்றார்.

சென்னை மாநகராட்சியில் தெரு நாய்கள் எத்தனை இருக்கின்றன என்பதற்கான கணக்கெடுப்பு தற்போது முதல்முறையாக நடத்தப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல்களை ஆவணப்படுத்துவதால் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது போன்ற மருத்துவ வசதிகளை செய்ய உதவியாக இருக்கும்.

சென்னையில் சுமார் 2 லட்சம் தெரு நாய்கள் இருக்கலாம் என்று தெரிகிறது. ஏற்கெனவே இருந்ததைவிட தெரு நாய்களின் எண்ணிக்கை தற்போது குறைந்திருக்கும் என்றே கருதப்படுகிறது. தற்போது நடத்தப்பட்டுள்ள கணக்கெடுப்பின் தகவல்கள் மாநகராட்சி ஆணையரின் அனுமதி பெற்ற பிறகு ஜூன் 15-ம் தேதிக்கு மேல் வெளியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x