Published : 04 Oct 2021 03:19 PM
Last Updated : 04 Oct 2021 03:19 PM

நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்த மத்திய அரசிடம் ஒப்புதல் பெறுக: அலுவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய பணப் பட்டுவாடாவை, விவசாயிகளுக்கு எவ்விதக் கால தாமதமுமின்றி வழங்க வேண்டுமெனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நெல்லைக் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை உயர்த்துவதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

’’தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து இன்று (4-10-2021) ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைச் செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் வே.ராஜாராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, 30-9-2021 அன்று முடிவடைந்த 2020-2021 காரிஃப் சந்தைப் பருவத்தில் 44.90 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த காரிஃப் பருவத்தில் 12.50 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்குக் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், முதன்முறையாக இந்தக் கொள்முதல் விவசாயிகளுக்கு மட்டுமே பலன் அளிக்கக்கூடியதை உறுதி செய்வதற்காக ஆன்லைன் முறையிலும் பதிவு செய்து, நெல்லைக் கொள்முதல் நிலையங்களில் விற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1-10-2021 முதல் தொடங்கும் ‘காரிஃப் 2021-2022’ சந்தைப் பருவத்தில் இதுவரை 752 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில், 608 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், விவசாயப் பெருமக்கள் பயனடையும் வகையில் இந்த ஆண்டு 144 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாகத் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தேவைப்படும் இடங்களில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கும், நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்வதற்கும் அனுமதி வழங்கிட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இல்லாத வகையில் எதிர்பாராத அளவிற்கு, இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியிலும், அக்டோபர் முதல் வாரத்திலும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வரக்கூடிய நிலையில், நெற்பயிர்களும், நெல் மூட்டைகளும் ஈரம் அடைந்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு, நெல்லைக் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை உயர்த்துவதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அலுவலர்களுக்குத் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய பணப் பட்டுவாடாவை, விவசாயிகளுக்கு எவ்விதக் காலதாமதமுமின்றி வழங்கிட வேண்டுமெனவும், டெல்டா மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அலுவலர்கள் உடனடியாக மாவட்டங்களுக்குச் சென்று இந்த நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்து, எவ்விதத் தடங்கலுமின்றி கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்’’.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x