Published : 18 Jun 2014 08:40 AM
Last Updated : 18 Jun 2014 08:40 AM

கூடங்குளம் அணுமின் உற்பத்தி மீண்டும் 1,000 மெகாவாட் எட்டியது

ஆய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் 1,000 மெகாவாட் அளவை செவ்வாய்க்கிழமை எட்டியது.

இங்குள்ள முதலாவது அணு உலை கடந்த 7-ம் தேதி பகல் 1.20-க்கு முழுத் திறனான 1,000 மெகாவாட்டை உற்பத்தி செய்து தேசிய சாதனை படைத்தது. தொடர்ந்து 4 நாட்களாக இதே அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு, திருநெல்வேலி, அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டது. மின் உற்பத்தி 1,000 மெகாவாட்டை எட்டிய நிலையில் பல்வேறு கட்ட ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வு முடிவுகள் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்துக்கு அனுப்பப்பட்டு வந்தன.

`ஆய்வுக்காக 4 நாளில் அணு உலை மற்றும் டர்பைன் செயல்பாடுகள் படிப்படியாக நிறுத்தப்படும்’ என்று அணு உலை நிலைய இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த 10-ம் தேதி மாலை 6.30 மணியளவில் அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து கடந்த 4 நாட்களாக இறுதிக்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அது தொடர்பான அறிக்கை மீண்டும் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்திடம் அளிக்கப்பட்டது. வாரியத்தின் ஒப்புதலுடன் சனிக்கிழமை இரவு 8.40 மணியளவில் முதலாவது அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மின்உற்பத்தி 1,000 மெகாவாட்டை எட்டியதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x