Published : 20 Jun 2021 04:14 PM
Last Updated : 20 Jun 2021 04:14 PM

அதிமுக தோல்வி குறித்து ஆப்பரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு 

திண்டுக்கல்லில் நடந்த அதிமுக மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்.

திண்டுக்கல் 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் தொகுதிகளில் அதிமுக தோல்வி குறித்து தனி ஆப்பரேஷன் தியேட்டர் கட்டி தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை வகித்தார். முன்னாள் மேயர் மருதராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சசிகலா-வுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசுகையில், "திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகளில், அதிமுகவினர் மெத்தனமாக இருந்ததன் காரணமாக சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை தழுவி உள்ளோம்.

இந்த தோல்வி குறித்து இங்கு ஆய்வு நடத்த முடியாது. வார்டு வாரியாக, கிளை வாரியாக ஆய்வு நடத்த வேண்டும். இதற்காக தனியாக ஒரு ஆப்பரேஷன் தியேட்டர் கட்டி அங்கு வைத்து ஆய்வு செய்வோம்.

சசிகலா அதிமுக அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. தேர்தலுக்கு முன்பு அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்த சசிகலா, தற்போது அரசியல் முக்கியத்துவத்தை தேடிக் கொள்ளும் வகையிலும், அதிமுகவை அபகரிக்கும் நோக்கிலும் செயல்படுகிறார். இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக இருந்துவரும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் சசிகலா குழப்பத்தை உருவாக்கி வருகிறார். அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x