Published : 24 Jun 2014 02:31 PM
Last Updated : 24 Jun 2014 02:31 PM

தமிழக மீனவர்கள் 64 பேரை விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 64 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும், தமிழக மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு மீதான நம்பிக்கையை இன்னும் தாம் இழந்துவிடவில்லை எனும் ரீதியில் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்: "தமிழக மீனவர்கள் 11 பேரும், அவர்கள் சென்ற 3 விசைப்படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டது குறித்து மிகுந்த வேதனைகளுடன் இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறேன்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த 11 மீனவர்கள் 23-ம் தேதி இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் காங்கேசந்துரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

கடந்த 19-ம் தேதி நாகை மீனவர்கள் 7 பேரும், 18-ம் தேதி 46 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஏற்கெனவே உங்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இந்நிலையில், மீண்டும் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். இப்பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதே சரியான தீர்வாக இருக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இந்திய அரசும் தமிழக அரசும் இணைந்து மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வழிவகுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் மிகுதியாகவே இருக்கிறது.

மீனவர்கள் கைது விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, 64 மீனவர்களையும் அவர்களது 38 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x