

நியாய விலைக் கடைகளில் மானிய விலையில் வழங்கும் 13 அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவது வரவேற்கத்தக்கது. ஒரு இயல்பான வாழ்க்கை திரும்பும் வரையில் மாதந்தோறும் இந்தப் பொருட்களை வழங்குவது அவசியமாகும். ஜூன் மாதத்தில் 2000 ரூபாய் வழங்குவதை மேலும் இரண்டு மாதங்களுக்காவது தொடர்ந்து வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில நிர்வாகக் குழுவின் விரிவடைந்த கூட்டம் காணொலிக் கூட்டமாக நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:
''கோவிட்-19 தடுப்பு அரசின் நடவடிக்கைக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குவோம்.
84 நாட்களுக்கு பின்னால் தமிழகத்தில் கரோனா கிருமித் தொற்று முதல் தடவையாகக் குறைந்திருப்பது மிகுந்த ஆறுதலை அளிக்கிறது.
முடங்கிக் கிடந்த நிர்வாகம்
தேர்தல் வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அரசாங்கமே இல்லாத நிலை தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டதால் கிருமித் தொற்று மிக வேகமாகத் தமிழகத்தை ஆட்கொண்டது.
திமுக அரசு பதவி ஏற்கும்போது, நெருப்பில் இறங்கியதுபோல கரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி, வல்லுநர் பரிந்துரைகளையும் கேட்டு வேறுவழியின்றி பொது முடக்கம் செயலாக்கப்பட்டது.
ஆக்சிஜன் உற்பத்தியில் முனைப்பு
உயிர் வளி (ஆக்சிஜன்) படுக்கைகள் பற்றாக்குறையைப் போக்க வழக்கமான சிவப்பு நாடா முறைகளைக் கைவிட்டுப் போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்காலிக மருத்துவமனைகள், அவற்றுக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நியமிப்பது, குடும்பத்திற்கு தலா இரண்டாயிரம் ரூபாய் ரொக்கப் பண உதவி ஆகியவை அதிவிரைவாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
தடுப்பூசி மருந்துக்கு ஏற்பாடு
தடுப்பூசி மருந்துகள் தேவையை நிறைவு செய்ய உலக அளவில் கொள்முதல் செய்ய முன்வந்ததும் பாராட்டுக்குரியதாகும். அனைவருக்கும் தடுப்பூசி போடும் முயற்சியில், முதல் கட்டமாக 18-44 வயதினருக்கு மாநில அரசு தடுப்பூசி போடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதும், தனியார் மருத்துவமனைகளின் மருத்துவக் கட்டணத்தை நிர்ணயித்து, முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் வழங்க முன்வந்திருப்பதும் நம்பிக்கையூட்டும் செயலாகும்.
தொடரும் நற்பணிகள்
கரோனா முதல் அலையைப் போல அல்லாது, இப்போது கிராமப் பகுதியில் அதிகரித்து வருகிறது. எனவே சிறு நகரங்கள், கிராமங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் நோய்த் தடுப்பு மருத்துவத்தை அதிகப்படுத்தி, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடக்க நிலையிலேயே சிகிச்சை தரப்பட வேண்டும். இங்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்கும், தடுப்பூசி போடுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
நியாய விலைக் கடைகளில் மானிய விலையில் 13 அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவது வரவேற்கத்தக்கது. ஒரு இயல்பான வாழ்க்கை திரும்பும் வரையில் மாதந்தோறும் இந்தப் பொருட்களை வழங்குவது அவசியமாகும். ஜூன் மாதத்தில் 2000 ரூபாய் வழங்குவதை மேலும் இரண்டு மாதங்களுக்காவது தொடர்ந்து வழங்க வேண்டும்.
மிகுந்த நிதிச்சுமையை தமிழக அரசு தாங்க வேண்டியிருந்தாலும், பொது முடக்கத்தின் காரணமாக வேலையும், வருவாயும் இழந்து நிற்கும் குடும்பங்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
மக்கள் நலன் பேணும் அரசு
நோய்த்தொற்று அதிகரிக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏற்றுமதி ஆடைகள் உற்பத்தி என்ற பெயரில் தொடர்ந்து தொழிற்சாலைகள் இயங்குவது தொற்றுப் பரவலுக்குக் காரணமாக இருக்கிறது என்ற அனைத்துத் தொழிற்சங்கங்களின் முறையீட்டை அரசு பரிசீலித்து ஆவன செய்ய வேண்டும்.
தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்ய செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோடெக் ஒருங்கிணைந்த தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தைத் தமிழ்நாடு அரசு எடுத்து நடத்த முடிவு செய்து, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி இருப்பது சரியான, நேரத்துக்கு ஏற்ற நடவடிக்கையாகும். இந்நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசின் பொதுத் துறையாக செயல்படுத்துவது நல்ல பயனளிக்கும்.
மருந்து உற்பத்தி
இதைப் போலவே நந்தம்பாக்கத்தில் மத்திய அரசு நடத்தி, தற்போது கைவிட்டுள்ள ஐ.டி.பி.எல். (தமிழ்நாடு) மருந்துகள் உற்பத்தி நிறுவனத்தையும் தமிழ்நாடு அரசு கையகப்படுத்த வேண்டும். அந்த நிலம் தமிழக அரசுக்கு உரியது என்பது மட்டுமல்லாமல், மருந்து உற்பத்திக்கான முழு உள்கட்டமைப்பு வசதிகள் அதில் உள்ளன. அதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் அனைத்துக்குமான மருந்து மாத்திரைகளை மலிவான விலையில் அரசு தயாரிக்க முடியும்.
அரசுக்கு ஆதரவு
நம்பிக்கை அளிக்கும் வகையிலும், உணர்வுபூர்வமாகவும் கரோனா தொற்றை முற்றாக ஒழிப்பதற்காக திமுக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் வரவேற்றுப் பாராட்டுகிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் பேராதரவும், ஒத்துழைப்பும் வழங்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறது''.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.