Published : 26 Apr 2021 12:37 PM
Last Updated : 26 Apr 2021 12:37 PM

தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலை திறக்க ஒப்புதல்: எல்.முருகன் பேட்டி

சென்னை

ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் தற்காலிகமாக இயக்கவும், முதலில் தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு முன்னுரிமை கொடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

கரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்படும் நோயாளிகள் ஆக்சிஜன் இன்றி மடியும் நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஆக்சிஜன் மட்டும் தயாரித்து அளிக்கிறோம் என வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

ஆனால், ஏற்கெனவே ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களும், தமிழக அரசும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதை எதிர்த்தன. பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன. இந்நிலையில் அரசே ஆலையை ஏற்று நடத்தலாமே என உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்தது.

இதுகுறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக அரசு தெரிவித்த நிலையில், இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்டியது. இந்தக் கூட்டத்தில் 8 கட்சிகள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும், ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம். ஆனால், அரசின் கட்டுப்பாட்டில் அனைத்தும் இயங்க வேண்டும். தற்காலிகமான ஆக்சிஜன் தேவைக்கு மட்டுமே ஆலை திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தின. இதில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்த பின்னர் தலைவர்கள் பேட்டி அளித்தனர்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“கரோனாவின் இரண்டாவது தாக்கம் அனைவருக்கும் தெரியும். மக்களது உயிர் மிகவும் முக்கியம். நாம் அனைவரும் அதுகுறித்து மட்டுமே கவலை கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது. இன்றைய கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். தமிழகத்துக்கு மட்டும் தர வேண்டும். தமிழகத்தின் தேவை போக மற்ற மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும். இது 4 மாதத்துக்கு மட்டுமே என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது”.

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x