Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM

குமரியில் பிரதமர் மோடி நாளை பிரச்சாரம்: ஏப்ரல் 3-ம் தேதி பிரியங்கா வருகை

நாகர்கோவில்

கன்னியாகுமரியில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாளை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மறுநாள் 3-ம் தேதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுடன், மக்களவை இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதனால், தமிழக தலைவர்கள் மட்டுமின்றி, தேசிய தலைவர்கள் கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஏற்கெனவே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குமரியில் பிரச்சாரம் செய்துள்ளனர்.

இந்நிலையில் நரேந்திர மோடிநாளை (2-ம் தேதி) காலைமதுரையில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். பின்னர், மாலை 3.45 மணியளவில் கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்ராதாகிருஷ்ணன் மற்றும் கன்னியாகுமரி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

பிரியங்கா பிரச்சாரம்

வரும் 3-ம் தேதி காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா அஞ்சலி செலுத்துகிறார். மாலை 3.30 மணியளவில் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x