Last Updated : 20 Mar, 2021 02:33 PM

 

Published : 20 Mar 2021 02:33 PM
Last Updated : 20 Mar 2021 02:33 PM

அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளும் திமுக போல பச்சோந்திக் கட்சி இல்லை: முதல்வர் பழனிசாமி விமர்சனம்

விழுப்புரம்

திமுக போல அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளும் பச்சோந்திக் கட்சி இல்லை என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கள்ளகுறிச்சி- விழுப்புரம் மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக, பாமக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் விஏடி கலிவரதனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு பேசியதாவது:

''ஒரு திட்டம் நிறைவேற வேண்டுமென்றால் மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை. அவர்களோடு இணக்கமாக இருந்தால்தான் மாநில அரசுக்குத் தேவையான நிதி கிடைக்கும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் முழுமையான நிதி பெற்று மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியும். தமிழகத்திற்குப் பெரிய திட்டம் வேண்டுமென்றால் மத்திய அரசின் அனுமதி தேவை. அவர்கள் மூலம்தான் நிதி பெற முடியும். அதைத்தான் அதிமுக செயல்படுத்தி வருகிறது.

1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்து அமைச்சரவையில் அங்கம் வகித்தது. அப்போது முரசொலி மாறனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருந்தது பாஜக அரசு. இதை ஸ்டாலின் மறுக்க முடியுமா? அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தவறு, திமுக கூட்டணி வைத்தால் சரியா? ஒன்றுபட்ட கருத்துகள் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன. வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஸ்டாலின் அவதூறாகப் பேசி வருகிறார்.

திமுக போல பச்சோந்திக் கட்சி அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளும் இல்லை. அடிக்கடி கட்சி மாறி, கூட்டணி வைக்கும் கட்சி திமுக. திமுகவின் கொள்கை, குடும்பத்தில் உள்ளவர்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதுதான். நாட்டு மக்களுக்கு நல்லது செய்வது அவர்களின் கொள்கை கிடையாது. எதிர்கால இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று திட்டமிடும் பாஜக நம்முடன் உள்ளது. பாமக வலிமையான கட்சி, மக்களின் செல்வாக்கான கட்சி இப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ள கூட்டணி நம் கூட்டணி. எனவே அதிமுக கூட்டணி வேட்பாளரான கலிவரதனை ஆதரித்து, தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x