Published : 18 Jun 2014 08:30 AM
Last Updated : 18 Jun 2014 08:30 AM

அமெரிக்க கப்பல் ஊழியர்கள் ரூ.8 லட்சம் கட்டணம் பாக்கி- நீதிமன்றத்தில் ஹோட்டல் மேலாளர் திடீர் வழக்கு

நிபந்தனை ஜாமீன் காரணமாக சென்னை ஹோட்டலில் தங்கியிருக் கும் அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 33 பேரும் ரூ.8 லட்சம் கட்டணம் பாக்கி வைத்திருப்பதால், கப்பல் வழக்கை ரத்து செய்யக் கோரி அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்யுமாறு ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்கா வைச் சேர்ந்த சீ மேன் கார்டு ஒகியோ என்ற கப்பலை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கியூ பிராஞ்ச் போலீஸார் கைப்பற்றினர். கப்பலில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, கப்பல் கேப்டன் வாலன்டைன் உள்ளிட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் வாலன்டைன், துணை கேப்டன் பால்டேவிட் தவிர்த்து மற்ற 33 பேருக்கும் உயர் நீதிமன்றக் கிளை ஜாமீன் வழங்கி யது. 33 பேரும் சென்னையில் தங்கி யிருந்து மயிலாப்பூர் காவல் நிலை யத்தில் தினமும் காலை, மாலையில் கையெழுத்திட வேண்டும் என கப்பல் ஊழியர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதனிடையே, ஆயுதக் கப்பல் வழக்கை ரத்து செய்யக் கோரி 35 பேரும் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனுவில், ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கப்பல் வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை மயிலாப்பூரில் உள்ள ஹோட்டல் ஷெல்டர் மேலாளர் எம். தவராஜ் தரப்பில், வழக்கறிஞர் ஆர்.காந்தி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நாளில் இருந்து கப்பல் ஊழியர்கள் 33 பேரும், எங்கள் ஹோட்டலில்தான் தங்கி உள்ளனர். இவர்கள் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்து 102 கட்டணம் பாக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி மனுத்தாக்கல் செய்யாமல், நேரடியாக வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். வழக்கு ரத்து செய்யப்பட்டால் 33 பேரும் கட்டணம் தராமல் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வாதிடுவதற்கு வசதியாக விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என்றார்.

கப்பல் ஊழியர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இ.கே.நந்தகுமார் வாதிடும்போது, இந்த வழக்கை அரசு தரப்பில் தேவை இல்லாமல் இழுத்தடிக்கின்றனர். இதனால், மனுதாரர்கள் பாதிக்கப் பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தங்குவதற்கும், உணவுக்கும் அரசு தரப்பில் உதவிகள் வழங்க வேண்டும் என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கலாம், எதிரிகளுக்கு இழப்பீடு வழங்க சட்டத்தில் இடமில்லை. இழப்பீடு கேட்பதை ஏற்க முடியாது என்று கூறியதுடன், விசாரணையை ஜூன் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x