Published : 18 Mar 2021 06:51 PM
Last Updated : 18 Mar 2021 06:51 PM

'அப்பாவை தொகுதி மக்களுக்கே அர்ப்பணித்துவிட்டோம்': அமைச்சர் உதயகுமாரின் மகள் பிரச்சாரக் களத்தில் உருக்கம்- அரசியல் வருகைக்கு அச்சாரமா?

மதுரை

என் தந்தையை திருமங்கலம் தொகுதி மக்களுக்காக அர்ப்பணித்துவிட்டதாக, திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மகள் பிரச்சாரம் செய்தார்.

திருமங்கலம் தொகுதியில் உள்ள டி.குன்னத்தூர், பேரையூர், கள்ளிகுடி, மைக்குடி ஆலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை ஆதரித்து அவரது மகள் உ.பிரியதர்சினி பிரச்சாரம் செய்து வந்தார்.

பிரியதர்சினி, பி.இ முடித்துள்ளார். ஆர்.பி.உதயகுமாரின் அம்மா சாரிடபிள் ட்ரஸ்ட் அமைப்பின் செயலாளராக உள்ளார்.

இதுவரை அம்மா சாரிடபிள் ட்ரஸ்ட் நிறுவனத்தின் விழாக்களில் மட்டுமே தலைகாட்டிவந்த பிரியதர்சினி, அரசியலில் நேரடியாக ஈடுபடவில்லை.

இவர், தற்போது திருமங்கலம் தொகுதியில் தந்தைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். அதனால், மகளை ஆர்பி.உதயகுமார் நேரடி அரசியலில் களம் இறக்கிவிட்டாரா? என்ற பேச்சு அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் பேரையூர் பகுதியில் பிரச்சாரம் செய்த பிரியதர்சினி, ‘‘எனது தந்தை 24 மணி நேரமும் தொகுதி மக்களின் நலனைப் பற்றி சிந்தித்துக்கொண்டே இருப்பார். எனது குடும்பத்தினர் அனைவருமோ திருமங்கலம் தொகுதி மக்களுக்காக எனது தந்தையை அர்ப்பணித்து விட்டோம். அவர் உங்களைப் பார்த்துக் கொள்வார். நீங்கள் அவரை வெற்றிபெற வைத்து அவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்‘‘என்று உருக்கமாகப் பேசினார்.

தொடர்ந்து அங்குள்ள வயல்வெளிகளில் வேலைபார்த்துக் கொண்டிருந்த ஆண், பெண் தொழிலாளர்களிடம் திருமங்கலம் தொகுதியில் ஆர்.பி.உதயகுமார் மேற்கொண்ட பணிகளைப் பற்றிய துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்தார்.

அவர்களிடம் அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த திருமங்கலம் தொகுதியில் தனது தந்தையை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்து சட்டப்பேரவைக்கு அனுப்பி வையுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x