Last Updated : 18 Mar, 2021 05:07 PM

1  

Published : 18 Mar 2021 05:07 PM
Last Updated : 18 Mar 2021 05:07 PM

பாஜக - அதிமுக தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸார் சுயேச்சையாகப் போட்டி; அதிருப்தியில் கூட்டணி வேட்பாளர்கள்

ரங்கசாமி: கோப்புப்படம்

புதுச்சேரி

பாஜக - அதிமுக தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸார் ரங்கசாமியிடம் ஆசி பெற்று சுயேச்சையாகப் போட்டியிடுவதால் கூட்டணி வேட்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. கூட்டணிக்குத் தலைமை தாங்கும் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 9, அதிமுகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், என்.ஆர்.காங்கிரஸ் அதிகாரபூர்வமாக தொகுதிகளையும், வேட்பாளர்களையும் இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால், வேட்பாளர்கள் அவர்களுக்கு ஏற்ற நல்ல நாளில் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டனர்.

பாஜகவுக்கு காமராஜர் நகர், நெல்லித்தோப்பு, லாஸ்பேட்டை, திருநள்ளாறு, காலாப்பட்டு, நிரவி, மண்ணாடிப்பட்டு, ஊசுடு, மணவெளி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுகவுக்கு காரைக்கால் தெற்கு, உருளையன்பேட்டை, உப்பளம், முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் பாஜக, அதிமுக கட்சித் தலைமை அதிகாரபூர்வமாக வேட்பாளர்களை அறிவித்தது. வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், பாஜக, அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த பிரமுகர்கள் சுயேச்சையாகக் களம் இறங்கியுள்ளனர்.

காலாப்பட்டு தொகுதியில் பாஜக வேட்பாளர் கல்யாணசுந்தரத்தை எதிர்த்து, என்.ஆர்.காங்கிரஸில் அண்மையில் இணைந்த செந்தில் சுயேச்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். இவருக்கு என்.ஆர்.காங்கிஸ் தலைவர் ரங்கசாமி ஆசிர்வாதம் வழங்கி வேட்புமனுவை வழங்கும் வீடியோ பரவியது. பாஜக போட்டியிடும் தொகுதியான திருநள்ளாற்றில் என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவா சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதேபோல், அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் உருளையன்பேட்டை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ நேரு ஏற்கெனவே வேட்புமனுவைத் தாக்கல் செய்து தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளார். முத்தியால்பேட்டையில் அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டனுக்கு எதிராக என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த பிரகாஷ்குமார் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இப்படி, சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்வது, அதிமுக, பாஜக இடையே பெரும் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. தங்கள் கட்சித் தலைமைக்கு இது தொடர்பான தகவல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

நாங்கள் வெல்வோம் என உறுதி

இது தொடர்பாக, பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் மற்றும் எம்.பி. ராஜீவ் சந்திரசேகரிடம் கேட்டதற்கு, "என்.ஆர்.காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது. இது மிகவும் எளிதான விஷயம். காங்கிரஸில் நடப்பதுபோல் இங்கு நடக்காது. தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாக உள்ளது. நாங்கள் அதிக இடங்களில் வெல்வோம்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x