சீட் வழங்காததால் முதல்வரிடம் கதறி அழுத பெண் எம்எல்ஏ

முதல்வரிடம் அழுத பரமேஸ்வரி முருகன்.
முதல்வரிடம் அழுத பரமேஸ்வரி முருகன்.
Updated on
1 min read

திருச்சிக்கு நேற்று வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன், தனக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததால் அழுதார்.

அதிமுக தேர்தல் அறிக்கையை நேற்று (மார்ச் 14) வெளியிட்ட கையுடன், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான கே.பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், ஊர் திரும்புவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு நேற்றிரவு வந்தனர்.

இவர்கள் இருவரையும் வரவேற்பதற்காக அதிமுக வேட்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், மு.பரஞ்ஜோதி, என்.நடராஜன், ப.குமார், த.இந்திராகாந்தி, வ.பத்மநாதன் மற்றும் அமைச்சர் எஸ்.வளர்மதி, மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ பரமமேஸ்வரி முருகன் ஆகியோர் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

திருச்சி மாவட்டத்தில் தற்போது எம்எல்ஏ-க்களாக உள்ள என்.நடராஜன் (திருச்சி கிழக்கு), ஆர்.சந்திரசேகர் (மணப்பாறை), எம்.செல்வராசு (முசிறி) ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அமைச்சர் எஸ்.வளர்மதி (ஸ்ரீரங்கம்), பரமேஸ்வரி முருகன் (மண்ணச்சநல்லூர்) ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஸ்ரீரங்கத்தில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கும், மண்ணச்சநல்லூரில் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் இருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதலில் வெளியே வந்து காரில் ஏறி புறப்பட்டார். அவரைத் தொடர்ந்து, சில நிமிடங்களுக்குப் பிறகு முதல்வர் கே.பழனிசாமி வெளியே வந்தார். அவருக்கு அதிமுக வேட்பாளர்கள் உட்பட கட்சியினர் பலரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றதுடன், அவரது காலில் விழுந்து வணங்கினர். எங்கும் நிற்காமல் வரவேற்பைப் பெற்றுக் கொண்டவாறே நடந்து சென்று தனது காரில் ஏறினார் முதல்வர் பழனிசாமி. அப்போது, அவரை நெருங்கிச் சென்ற மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன், காரில் இருந்த முதல்வர் கே.பழனிசாமியின் கைகளைப் பற்றிக் கொண்டு கதறி அழுதார். அவரிடம் ஏதோ கூறிய முதல்வர் கே.பழனிசாமி, ஓரிரு விநாடிகளில் அங்கிருந்து புறப்பட்டார்.

முந்தானையால் கண்ணீரை துடைத்துக்கொண்ட எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன்.
முந்தானையால் கண்ணீரை துடைத்துக்கொண்ட எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன்.

இதையடுத்து, தனது சேலை முந்தானையால் கண்ணீரைத் துடைத்தவாறே அழுது கொண்டே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார் பரமேஸ்வரி முருகன். முதல்வரிடம் பெண் எம்எல்ஏ கதறியழுததால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in