Published : 14 Mar 2021 10:47 AM
Last Updated : 14 Mar 2021 10:47 AM
தஞ்சாவூர் அருகே அம்மாப்பேட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் பயிலும் 20 மாணவிகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், பள்ளிக்கு இருவாரத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அம்மாப்பேட்டையில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரை 1100 மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு சில நாட்களுக்கு முன் உடல் நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் சக மாணவிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி கடந்த 11-ம் தேதி பள்ளியில் பயிலும் 460 மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது 13ம் தேதி உறுதியானது. இதையடுத்து மாணவிகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 12-ம் தேதி மாணவிகள் 619 பேருக்கும், ஆசிரியைகள் 35 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் 14ம் தேதி காலை வெளியானது. இதில் 36 மாணவிகளுக்கும், ஒரு ஆசிரியைக்கும் கரோனா தொற்று உறுதியானது தெரிய வந்தது.
இந்தப் பள்ளியில் படித்த 56 மாணவிகளுக்கும் ஒரு ஆசிரியைக்கும் கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளியில் உள்ள அனைத்து அறைகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிக்கு இருவார காலம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அம்மாபேட்டையில் உள்ள பள்ளியை பார்வையிட்டார். அங்கிருந்த ஆசிரியரிடம் கரோனா குறித்து கேட்டறிந்தார். மேலும் இன்று 14 ஆம் தேதி காலை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவரிடம் அறிவுரை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...