Last Updated : 07 Mar, 2021 12:24 PM

 

Published : 07 Mar 2021 12:24 PM
Last Updated : 07 Mar 2021 12:24 PM

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் அமித் ஷா சுவாமி தரிசனம்

கன்னியாகுமரி

தமிழகத்தில் பாஜக- அதிமுக கூட்டணியைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று குமரி மாவட்டத்துக்குப் பிரச்சாரத்துக்கு வந்துள்ள உள்துறை அமைச்ச அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.

நாகர்கோவிலில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்கிறார். சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகளின் தேசியத் தலைவர்கள் அடுத்தடுத்துப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்துக்கு இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்குச் சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களிடம் பேசும்போது,, “தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணியைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். பொன். ராதாகிருஷ்ணனை கன்னியாகுமரி தொகுதி மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். இந்தத் தேர்தல் மூலம் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பின்னர், காலை 11.15 மணியளவில் நாகர்கோவில் இந்து கல்லூரி சந்திப்பு முன்பிருந்து ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்தார்.

நண்பகல் 12.30 மணியளவில் வடசேரி உடுப்பி ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார். பிற்பகல் 2 மணியளவில் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறார்.

அமித் ஷா வருகையை முன்னிட்டு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், இந்து கல்லூரி சாலை, செட்டிகுளம், வேப்பமூடு, காமராஜர் சிலை ஆகிய பகுதிகளில், மத்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இந்து கல்லூரி சந்திப்பில் இருந்து வேப்பமூடு காமராஜர் சிலை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமித் ஷா வருகை காரணமாகவே, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணனை கட்சித் தலைமை நேற்றே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x