தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம்; தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்: ஸ்டாலின், கமல் வலியுறுத்தல் 

கமல் - ஸ்டாலின்: கோப்புப்படம்
கமல் - ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

பலதுறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் விபத்துக்கள் நேராமல் பணிபுரியவும், பாதுகாப்புடனும், சுற்றுச்சூழல் கெடாமல் பணிபுரியவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதி தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 4) தன் முகநூல் பக்கத்தில், "பட்டாசு ஆலையில் உயிரிழப்புகளும் பலதரப்பட்ட ஆலைகளின் கதவடைப்புகளும் தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குகின்றன.

உற்பத்தி - பொருளாதார வளர்ச்சி - நாட்டின் முன்னேற்றம் இவற்றில் முக்கிய பங்காற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடத் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு நாளான இன்று (மார்ச் 4) வலியுறுத்துகிறேன்.

தொழிலாளர் நலன் காக்க எந்நாளும் துணை நிற்போம்!” என பதிவிட்டுள்ளார்.

அதேபோன்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், "இன்று தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம். போராடிப் பெற்ற உலகளாவிய உரிமையான 8 மணிநேர வேலை என்பது இந்தியாவில் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. உழைக்கும் இடத்தில் பாதுகாப்பு தொடங்கி, வேலை உத்தரவாதம் வரைக்கும் பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. இந்நிலை தொடரலாகாது" என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in