Published : 02 Mar 2021 12:32 PM
Last Updated : 02 Mar 2021 12:32 PM

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு; பேச்சுவார்த்தை நாளையும் தொடரும்: இந்தியக் கம்யூனிஸ்ட்

சுப்பராயன்: கோப்புப்படம்

சென்னை

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நாளையும் தொடரும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்.6 அன்று சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு, போட்டியிடும் தொகுதிகள், பிரச்சாரப் பணிகள், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் திமுக, அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

திமுக கூட்டணியில் நேற்று (மார்ச் 1) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், இன்று (மார்ச் 2) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள, எம்.பி. சுப்பராயன் தலைமையிலான 3 பேர் அடங்கிய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவினர், அண்ணா அறிவாலயத்தில், திமுகவின் தொகுதிப் பங்கீடு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் எம்.பி. சுப்பராயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இன்று காலை 11 மணிக்குப் பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மீண்டும் நாளை பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம். நல்ல முடிவு மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சியில் அமைப்பு ரீதியாகப் போடப்பட்ட குழுதான் பேச்சுவார்த்தை நடத்தும். அதன் அடிப்படையில் மூவர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. எனவே, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கலந்துகொள்ளவில்லை.

எங்களுடைய கோரிக்கையை நாங்கள் வெளிப்படுத்தியிருக்கிறோம். அவற்றின் மீதான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தை மேலும் தொடர்கிறது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x