அரசியல் கட்சியில் எல்லோருக்கும் வரவேற்பு கொடுப்பது வழக்கம் தான்: சசிகலா வருகை குறித்து எல்.முருகன் கருத்து

எல்.முருகன்: கோப்புப்படம்
எல்.முருகன்: கோப்புப்படம்
Updated on
1 min read

சசிகலா தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவித்த பிறகே அதிமுக கூட்டணியில் எந்த மாதிரியான தாக்கம் இருக்கும் என்பதை கூற முடியும் என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு விடுதலையான சசிகலா, கடந்த 8-ம் தேதி பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பினார். அப்போது, அவருக்கு அமமுக தொண்டர்களும் அவரது ஆதரவாளர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆங்காங்கே அவருக்கு ஆதரவாக வைக்கப்பட்டிருந்த பேனர்களும் கிழிக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னையில் இன்று (பிப். 11) தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சசிகலா வருகையால் அதிமுகவில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பது குறித்தும், சசிகலாவுக்கு அளிக்கபட்ட வரவேற்பு குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எல்.முருகன் பதிலளித்தார்.

அப்போது, "சசிகலா இரு நாட்களுக்கு முன்புதான் வந்திருக்கிறார். அவருடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை அவர் தெரிவித்த பிறகே, என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பது குறித்து பேச முடியும். அரசியல் கட்சியில் எல்லோருக்கும் வரவேற்பு கொடுப்பது வழக்கம். அதில் புதிதாக ஏதும் இல்லை. அவருடைய தேர்தல் நிலைப்பாடு என்ன என்பதை அறிவித்த பிறகு அதுகுறித்து கருத்து சொல்கிறேன்" என எல்.முருகன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in