மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்; கோரிக்கைகளை நிறைவேற்றுக: தினகரன்

டிடிவி தினகரன்: கோப்புப்படம்
டிடிவி தினகரன்: கோப்புப்படம்
Updated on
1 min read

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்திவரும் நிலையில், அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசு முன்வர வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், அரசுப் பணி ஒதுக்கீட்டில் பின்னடைவு ஒதுக்கீட்டைக் கண்டறிந்து மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், தனியார் துறையில் 5% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில், மாற்றுத்திறனாளிகள் இன்று (பிப்.10) இரண்டாவது நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "அரசுப் பணி ஒதுக்கீட்டில் பின்னடைவு ஒதுக்கீட்டைக் கண்டறிந்து மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும்.

ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் வழங்குவதுபோல் மாதாந்திர உதவித்தொகையை ரூ.3,000 ஆக உயர்த்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றிலிருந்து தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் கடவுளின் குழந்தைகள் என்பதை உணர்ந்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in