Published : 17 Jun 2014 08:54 AM
Last Updated : 17 Jun 2014 08:54 AM

மும்பை பெண்ணுக்கு தமிழக இளைஞரின் இதயம்

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மும்பையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு, மூளைச்சாவு ஏற்பட்ட தமிழக இளைஞரின் இதயத்தைப் பொருத்தும் பணியை டாக்டர்கள் திங்கள்கிழமை மாலை தொடங்கினர்.

மும்பையை சேர்ந்தவர் கேப்டன் அஸ்பி பி மினோசெர்ஹோஜி. இவர் கடற்படையில் பொறியா ளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அர்மைடி (55). இவர்களுடைய மகள் அவோவி (21). இவர் அண்மையில்தான் பி.காம் பட்டப் படிப்பை முடித்துள்ளாராம். இவருக்கு நான்கு ஆண்டுகளாக இதய நோய் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இவருக்கு நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டும் பலனளிக் கவில்லை. ஆறு மாதங்களுக்குள் மாற்று இதயம் பொருத்தாவிடில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்தனர். இதனால் அமெரிக்காவுக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், அமெரிக் காவில் மாற்று இதயம் கிடைக்க இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்பதால் அங்கு போகும் திட்டத்தைக் கைவிட்டனர். சென்னையில் உடல் உறுப்பு தானம் அதிக அளவில் நடக்கும் செய்தியறிந்து, மலர் மருத்துவமனை என முன்பு அறியப்பட்ட அடையார் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் மும்பை இளம்பெண் அவோவியை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தமிழக இளைஞர்

இந்த நேரத்தில்தான் செங்கல் பட்டில் விபத்தில் படுகாய மடைந்த லோகநாதனுக்கு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்டது தெரியவந்தது. அவரது இதயத்தை மாற்று இதயமாக வழங்க அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்கு லோகநாதனின் தாயார் முழு ஒத்துழைப்பு தந்தார்.

அதைத் தொடர்ந்து, இரு மருத்துவமனைகளின் மருத்துவர்களும் ஆலோசனை செய்து உரிய நேரத்துக்குள் அறுவைச் சிகிச்சை செய்து லோகநாதனின் இதயத்தை ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்தனர். அறுவைச் சிகிச்சை செய்த இதயத்தை சாலை மார்க்கமாக ஆம்புலன்ஸில் விரைந்து எடுத்துச்செல்ல போலீஸாரும் ஒத்துழைப்பதாக உறுதியளித்தனர்.

இதற்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் லோகநாதனின் இதயம் திங்கள்கிழமை மாலை பிரித்து எடுக்கப்பட்டது. அதே சமயம் மறுபுறம் அவோவிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சைக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

அதன்படி லோகநாதனின் இதயத்தை அரசுப் பொது மருத்துவமனையிலிருந்து ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இளம்பெண்ணின் தாயார் உருக்கமான பேட்டி

தனது மகளுக்கு மாற்று இதயம் கிடைத்துவிட்டது, பொருத்தப்போகிறார்கள் என்ற தகவலை கேட்டதும் தாயார் அர்மைடி கண்ணீர் மல்க கூறியதாவது: “எனது மகளுக்கு பொருத்துவதற்கு இதயம் கிடைத்துள்ளது என்ற தகவல் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உடல் உறுப்பு தானம் செய்வது என்பது எவ்வளவு முக்கியமானது. நாம் எல்லோரும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும்” என்றார்.

முன்னதாக இந்த இதய மாற்று அறுவைச் சிகிச்சையை செய்வதற்கு மருத்துவமனையின் இதய சிகிச்சை பிரிவு இயக்குநர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதில் துறைத் தலைவர் சுரேஷ்ராவ் உள்ளிட்ட ஐந்து மருத்துவர்களும் இதர மருத்துவ அரங்கு ஊழியர்களும் என மொத்தம் 25 பேர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

டாக்டர்பாலகிருஷ்ணன் பேட்டி

கே.ஆர்.பாலகிருஷ்ணன் கூறுகையில் “இந்த நோயாளிக்கு மாற்று இதயம் பொருத்தாவிட்டால் மூன்று முதல் ஆறு மாதத்துக்குள் இறந்துவிடும் வாய்ப்பு உள்ளது. இறந்தவரின் உடலில் இருந்து இதயத்தை எடுத்த மூன்றரை முதல் நான்கு மணிநேரத்துக்குள்தான் இன்னொருவருக்கு பொருத்த முடியும். இதுவரை 25க்கும் மேற்பட்ட இதய மாற்று அறுவை சிகிச்சைகளை நாங்கள் செய்துள்ளோம்” என்றார்.

பரபரப்பானது மருத்துவமனை

இதய நோயாளி அவோவி பெற்றோருக்கு ஒரே மகள் என்பதால் எப்படியாவது தனது மகளை காப்பாற்றிவிட வேண்டும் என்று உறுதியாக உள்ளனர். இந்த முக்கியமான அறுவைச் சிகிச்சை பற்றிய செய்தி சேகரிக்க ஊடகத்தினர் வந்துள்ளதால் மருத்துவமனை முழுவதும் பரபரப்பு அடைந்தது. மருத்துவமனையில் உள்ள அனைத்து டாக்டர்களும் முன்னதாகவே வந்து அறுவை சிகிச்சையின் வெற்றியைக் காண வந்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x