Published : 09 Feb 2021 03:13 AM
Last Updated : 09 Feb 2021 03:13 AM

கல்லூரிகள் திறந்த பிறகும் மின்சார ரயில்களில் பயணிக்க நேர கட்டுப்பாடு விதிப்பதால் மாணவர்கள் பாதிப்பு: ரயில் நிலையங்களில் அலுவலர்களுடன் வாக்குவாதம்

கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகும், மின்சார ரயில்களில் பயணம் செய்ய நேரக்கட்டுப்பாடு நீடிப்பதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனவே, அவர்கள் ரயில் நிலைய அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 600-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் அத்தியாவசிய பணியாளர்கள், பெண்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி ரயில்களில் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், பொதுமக்கள் அலுவலக நேரங்களில் பயணம் செய்ய நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்ட பிறகும், மின்சார ரயில்களில் பயணிக்க மாணவர்களுக்கு நேரக்கட்டுப்பாடு தொடர்வதால், அவர்கள் அவதிப்படுகின்றனர். சில ரயில் நிலையங்களில் மாணவர்கள், அங்குள்ள ரயில் நிலைய அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் சிலர் கூறும்போது, “நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மின்சார ரயில்களில் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்ய நேரக்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

குறிப்பாக, காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் நாங்கள் பயணம் செய்வதற்கு கட்டுப்பாடு விதிப்பது நியாயம் இல்லை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எங்களைப் போன்று ஆயிரக்கணக்கான மக்கள் மின்சார ரயில்களையே பயன்படுத்தி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு எங்களுக்கு தற்போதுள்ள நேரக்கட்டுப்பாட்டை நீக்க தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கல்லூரி மாணவர்களுக்கு நேரக்கட்டுப்பாட்டை நீக்குவது தொடர்பாக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்’’என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x