Published : 11 Jun 2014 10:30 AM
Last Updated : 11 Jun 2014 10:30 AM

யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 36 தமிழக மீனவர்கள் விடுதலை

பாம்பன், ராமேசுவரம், மண்டபம் மற்றும் ஜெகதாப் பட்டினத்தை சார்ந்த மீனவர்கள் 1,500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் சனிக்கிழமை மீன் பிடிக்கச் சென்றனர். இதில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே சனிக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்த 18 விசைப்படகு களை கைப்பற்றி 82 மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்

இதில் 9 விசைப்படகுகளில் இருந்த 46 மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூன் 16 வரை அனுராதபுரம் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அதுபோல. மேலும் 8 விசைப்படகுகளில் இருந்த 36 மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூன் 20 வரையிலும் யாழ்ப்பாணம் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கவும் உத்தரவிடப்பட்ட.து.

36 பேர் விடுதலை

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழக மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதாக உத்தர விட்டார். இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 36 பேர் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டு யாழ்ப்பாணத் திலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டனர். மேலும் அனுராதபுரம் சிறையில் உள்ள 46 மீனவர்கள் இன்று (புதன்கிழமை) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விடுதலை செய்யப்பட உள்ளனர்.

இலங்கை மீனவர் 2 பேர் விடுதலை

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சந்திரமோகன், பருத்தித் துறை திக்கத்தைச் சேர்ந்த ரவிச் சந்திரன் இருவரும் கடந்த ஏப். 15-ல் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களது படகு பழுதானது. இதனால் தத்தளித்துக் கொண்டிருந்த வர்களை இந்திய கடற்படையினர் கடலோர காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இலங்கையை சேர்ந்த இருவரிடமும் மீனவர்களுக்கான அடையாள அட்டைகள் எதுவும் இல்லாததால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நாகை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டுக் குழு விசாரணையில் அவர்கள் மீனவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த தகவல் வேதாரண்யம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி லதாவிடம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் திங்கள்கிழமை இரண்டு இலங்கை மீனவர்களையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x