Published : 17 Jun 2014 10:49 AM
Last Updated : 17 Jun 2014 10:49 AM

போக்குவரத்து ஊழியர்களுடன் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

போக்குவரத்து ஊழியர்களுடன் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படும் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. இம்முறையும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை வழங்காமல் துரோகம் செய்து வருகிறது.

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும் அரசுக்கும் இடையே 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும் என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் விதியாகும்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றப் பட்டது. 2006 ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் பா.ம.க. அளித்த அழுத்தம் காரணமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த தி.மு.க. ஆட்சியில் இரு முறை புதிய ஊதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

கடந்த ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட 11 ஆவது ஊதிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 01.09.2013 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அதன்பின் கிட்டத்தட்ட ஓராண்டாகியும் 12 ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்துக்கழக ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்குக் கூட தமிழக அரசு தயாராக இல்லை.

முந்தைய ஆட்சியில் நடைமுறைப்படுத்தியதைப் போன்றே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் ஊதிய ஒப்பந்தம் என்ற நிலையை ஏற்படுத்த தமிழக அரசு முயல்கிறதோ என்ற ஐயம் தொழிலாளர்களிடையே நிலவுகிறது.

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட உரிமைகளை வழங்குவதிலும் போக்குவரத்துக் கழக ஊழியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் அ.தி.மு.க. அரசு நடத்துகிறது.

அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுவிட்ட போதிலும், அது போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் மின்வாரிய ஊழியர்களுக்கும், போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கும் மட்டும் தான் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும்போதே, பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும்.

மாநிலத்தின் அத்தியாவசியத் சேவைகளில் ஒன்றான போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற மறுப்பது நியாயமா? என்பதை தமிழக அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், அவர்களுடன் 12ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சை உடனடியாக தொடங்கவேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x