Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM

வேளாண்மை பொருட்களை கொண்டு செல்ல தமிழகத்திலும் கிசான் ரயில் சேவையை தொடங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

வேளாண் பொருட்களை பிற இடங்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் இயக்கப்படும்பிரத்யேக கிசான் ரயில் சேவையைத் தமிழகத்திலும் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக, போக்குவரத்துக்கு அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது.

இதற்கிடையே, இந்தியாவிலேயே முதல்முறையாக, விவசாய விளைபொருட்களை மட்டும் கொண்டு செல்லக்கூடிய பிரத்யேக கிசான் ரயில் சேவை, மகாராஷ்டிராவிலிருந்து பிஹாருக்குத் தொடங்கப்பட்டது.

18 வழித்தடங்கள்

தற்போது வரை 18 வழித்தடங்களில் கிசான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 157 ரயில் சேவைகளின் மூலம் இதுவரை 50 ஆயிரம் டன் விளைபொருட்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளன.

எனவே, தமிழகத்திலும் இதுபோன்ற பிரத்யேக ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் செல்லமுத்து கூறியதாவது:

விளை பொருட்களை பக்கத்து மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கான செலவு அதிகமாவதால், விவசாயிகளிடம் விலையைக் குறைத்து அம்மாநில வியாபாரிகள் வாங்குகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதற்கிடையே, மத்திய அரசு செயல்படுத்தி வரும் விவசாய ரயில் சேவை திட்டம் விவசாயிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்ட எளிதில் அழுகக் கூடிய பொருட்களுக்கு குளிர்பதன வசதி செய்யப்பட்டுள்ளது இந்த ரயிலின் சிறப்பு அம்சமாகும். எனவே, தென்மாநிலங்களை இணைக்கும் வகையில் கிசான் ரயில் சேவையைத் தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x