Published : 21 Jan 2021 05:31 PM
Last Updated : 21 Jan 2021 05:31 PM
திருச்சியில் இன்று எம்ஜிஆர் சிலையிடம் விவசாயிகள் மனு அளித்ததுடன், திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டதால், அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
"தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ.30,000, வெங்காயத்துக்கு ரூ.40,000, பிற பயிர்களுக்கு ரூ.20,000 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். அதுவரை விவசாயக் கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சீர்மரபினர் சமூகத்தில் உள்ள 68 சாதிப் பிரிவினருக்கும் டிஎன்டி என்று சான்றிதழ் வழங்க வேண்டும். வேளாண் சட்டங்களுக்குத் தமிழ்நாடு முதல்வர் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் எம்ஜிஆர் சிலையிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலைப் பகுதியில் விவசாயிகள் இன்று காலை திரண்டனர். ஆனால், போலீஸார் அவர்களை எம்ஜிஆர் சிலை அருகே செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, விவசாயிகளும் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர்.
சிறிது நேரத்துக்குப் பிறகு அய்யாக்கண்ணு மற்றும் சாதி அமைப்பைச் சேர்ந்த கே.பி.எம்.ராஜா ஆகிய இருவர் மட்டும் ரவுண்டானாவுக்குள் சென்று எம்ஜிஆர் சிலையிடம் மனு அளித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். அப்போது, சாலையோரம் காத்திருந்த விவசாயிகள் திடீரெனச் சாலைக்கு வந்து தரையில் படுத்துக்கொண்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 55 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக, அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறும்போது, ''எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றத் தமிழ்நாடு முதல்வருக்கு நல்ல எண்ணத்தை அளிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் சிலையிடம் வேண்டிக் கொண்டு மனு அளித்தோம். எங்கள் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள், சீர்மரபினர் ஆகியோர், அரசுக்கு எதிராக வாக்களிக்கும் நிலையை ஏற்படுத்தக் கூடாது'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...