Published : 08 Jan 2021 06:53 AM
Last Updated : 08 Jan 2021 06:53 AM

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழையால் 20 வீடுகள் இடிந்து சேதம்

கோவையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் புரூக்பாண்ட் ரோடு ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ் தேங்கிய மழைநீர். (அடுத்தபடம்) கவுண்டம்பாளையத்தில் இடிந்து விழுந்த வீடு. படங்கள்: ஜெ.மனோகரன்

கோவை

கோவை மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், 20 வீடுகள்இடிந்து சேதமடைந்தன. பொதுமக் களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டது.

கோவையில் நேற்று முன்தினம் (ஜன.6) மாலை சுமார் 7 மணியள வில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல கனமழையாக மாறியது. அதிகாலை 2 மணி வரை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதனால் காந்திபுரம், மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, அவிநாசி சாலை, பொள்ளாச்சி சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அவிநாசி சாலை மேம்பாலத்தின் கீழ்ப் பகுதி, புரூக் பாண்ட் சாலையில் உள்ள ரயில்வே பாலம், லங்கா கார்னர் உள்ளிட்ட தாழ்வானப் பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

சிவானந்தாகாலனி, ரத்தினபுரி பகுதியில் உள்ள சில இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். மாவட்டத்தில்சுமார் 20 இடங்களில் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மேட்டுப்பாளையம், அன்னூர், பேரூர், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை, வெங்காயம், காய்கறிப் பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

நொய்யல் ஆறு, சுண்ணாம்பு காளவாய் ஆகியவற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் சாலைகளில் ஏற்பட்ட விரிசல்களில் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கிக்கொண்டன. தொடர்ந்து 7 மணி நேரமாகக் கொட்டித் தீர்த்த கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 588 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறையினர் கூறும்போது, “அன்னூரில் 15 மி.மீ., மேட்டுப்பாளையத்தில் 23.1 மி.மீ., சின்கோனாவில் 15 மி.மீ., சின்ன கல்லாறில் 42 மி.மீ., வால்பாறை பிஏபி பகுதியில் 20 மி.மீ., வால்பாறையில் 18 மி.மீ., சோலையாறில் 17 மி.மீ., ஆழியாறில் 11 மி.மீ., சூலூரில் 37 மி.மீ., பொள்ளாச்சியில் 36 மி.மீ., கோவை தெற்கு பகுதியில் 92 மி.மீ., விமான நிலையத்தில் 112.8 மி.மீ., பெரியநாயக்கன்பாளையத்தில் 82 மி.மீ., தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x