Published : 09 Jun 2014 04:28 PM
Last Updated : 09 Jun 2014 04:28 PM

தமிழக மீனவர்களுக்கு ஜூன் 20 வரை காவல் நீட்டிப்பு

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்தாகக் கூறி கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை ஜூன் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் திங்கட்கிழமை உத்திரவிட்டது.

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மற்றும் ஜெகதாப் பட்டிணத்தை சார்ந்த மீனவர்கள் 1,500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனர். இதில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே சனிக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த 18 விசைப்படகுகளை கைப்பற்றி 82 மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

இதில் 9 விசைப்படகுகளில் இருந்த 46 மீனவர்களை தலைமன்னார் கடற்படைத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு திங்கட்கிழமை மன்னார் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த நீதிபதி ஆனந்தி கனகரத்தினம் மீனவர்களை ஜீன் 16 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்டார். பின்னர் மீனவர்கள் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் 8 விசைப்படகுகளில் இருந்த 36 மீனவர்களை காங்கேசன் துறை கடற்படைத் தளத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த மீனவர்களை விசாரித்த நீதிபதி மகேந்திராஜா ஜீன் 20 வரையிலும் நீதிமன்றத்தில் அடைக்க உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து 36 மீனவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் நெடுந்தீவு அருகே பழுதடைந்த விசைப்படகில் இருந்து இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x