Published : 14 May 2014 10:18 AM
Last Updated : 14 May 2014 10:18 AM

அண்ணாமலைப் பல்கலையில் கடந்த ஆண்டு கட்டணமே வசூலிக்கப்படும்: அரசு நிர்ணயித்த கட்டணம் கிடையாது என அறிவிப்பு

சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக் கழகம் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டாலும்,கடந்த ஆண்டுகளில் வசூலிக்கப்பட்டக் கட்டணமே வசூலிக்கப்படும் என அதன் நிர்வாக அதிகாரி ஷிவ்தாஸ்மீனா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் நிர்வாக அதிகாரி ஷிவ்தாஸ்மீனா செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்கு அளித்தப் பேட்டி:

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூரக் கல்வி இயக்கத்தின் மூலம் 2014-15 கல்வி ஆண்டில் தொலை தூரக் கல்வி படிப்பின் மூலம் 2 லட்சம் மாணவ, மாணவியர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும், கடந்த ஆண்டு 1 லட்சத்து 34 ஆயிரம் சேர்க்கை நடைபெற்றதாகவும் தெரிவித்த அவர், அரசு பொறுப்பேற்றதற்கு முந்தைய ஆண்டான 2012-13 ஆண்டில் 1 லட்சத்து 19 ஆயிரம் 500 பேர் சேர்க்கை பெற்றனர். கடந்த ஆண்டு அரசு பொறுப்பேற்ற பின்னர் 15 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்ந்து பயிலுகின்றனர். 2014-15ம் ஆண்டில் 2 லட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள்.

மேலும் பொறியியல் படிப்பிற்கு 3 ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்சி வேளாண்மை படிப்பிற்கு 1000 மாணவர்களும், பி.எஸ்சி தோட்டக்கலை படிப்பிற்கு 75 மாணவர்களும் சேர்க்கப்பட உள்ளனர்.

மேலும் பல்கலைக்கழகத்தில் இவ்வாண்டு மருத்துவம், வேளாண்மை, பொறியியல் படிப்புகளுக்கு தமிழக அரசின் இடஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்கள் மேல்நிலைப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும். கலந்தாய்வு தேதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மருத்துவர், பல் மருத்துவம், பொறியியல் மற்றும் பிஎஸ்சி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும், 62 படிப்பு மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

எம்பிபிஎஸ் படிப்பிற்கு 150 மாணவர்களும், பிடிஎஸ் படிப்பிற்கு 100 மாணவர்களும் சேர்க்கப்பட உள்ளனர். மருத்துவம், பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளுக்கு கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு விதித்துள்ள கட்டணம்

அண்ணாமலை பல்கலையில் கடந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கு ரூ.65 ஆயிரமும், மருத்துவ படிப்பிற்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் கட்டணம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில் இந்த ஆண்டு அரசு கல்லூரியில் பொறியியல் படிப்பிற்கு ரூ.32,500ம், மருத்துவப்படிப்பிற்கு ரூ.25,800 மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x