Published : 06 May 2014 08:45 AM
Last Updated : 06 May 2014 08:45 AM

புது மணப்பெண் கொலை: கால்சென்டர் டிரைவருக்கு வலை வீச்சு

பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசிச் சென்றதாக கருதப்படும் கார் ஓட்டுநரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை போரூர் ஏரியில் கடந்த சனிக்கிழமை (மே 3) ஒரு சாக்கு மூட்டை மிதந்தது. போரூர் காவல் துறையினர் அதை திறந்து பார்த்தபோது, அதில் ஒரு பெண்ணின் உடல் இருந்தது. தலை, கைகள் தனியாக வெட்டப்பட்டு சாக்குக்குள் வைக்கப்பட்டிருந்தன.

விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ரேகா(25) என்பது தெரிந்தது. இவர் நெசப்பாக்கம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரின் மனைவி. அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக ஸ்ரீராம் வேலை பார்க்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் மனைவி ரேகாவை காணவில்லை என்று கடந்த 1-ம் தேதி எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் ஸ்ரீராம் புகார் கொடுத்தார். கே.கே. நகர் உடற்பயிற்சிக் கூடத்தில் ரேகா கடந்த 4 மாதமாக பயிற்சியாளராக வேலை செய்தார். அதற்கு முன்பு கிண்டியில் உள்ள கால்சென்டரில் வேலை செய்தார். அப்போது கால்சென்டர் கார் ஓட்டுநர் சாம்சன் என்பவர் ரேகாவை காதலித்ததாக கூறப்படுகிறது. அவரது தொல்லை தாங்காமல் ரேகா அந்த வேலையை விட்டுவிட்டு உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்தாராம்.

இந்த கொலையில் டிரைவர் சாம்சன் மீது சந்தேகம் இருப்பதாக ஸ்ரீராம் கூறினார். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சாம்சன் தலைமறைவாக இருப்பது தெரிந்தது.

ரேகாவை சாம்சன் காரில் கடத்திச் சென்று கொலை செய்து, ஏரியில் வீசி இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். கார் ஓட்டுநர் சாம்சனை தீவிரமாக தேடிவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x