Published : 14 Nov 2020 02:16 PM
Last Updated : 14 Nov 2020 02:16 PM

சென்னையில் காவல் ஆணையர் ஆய்வு; பொதுமக்கள், போலீஸாருக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து

சென்னை

சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுச் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டு, பணியிலிருந்த போலீஸார் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தீபாவளிப் பண்டிகையையொட்டி ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்புப் பணிகளை நேற்றிரவு ஆய்வு செய்தார். தி.நகர், கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு அங்கு காவல் பணி செய்துவரும் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து இனிப்புகள் வழங்கினார்.

நேற்று (13.11.2020) இரவு தீபாவளிப் பண்டிகையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகளுக்காக அரசு சிறப்புப் பேருந்துகள் சிஎம்பிடி பேருந்து நிலையத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பொதுமக்கள் பாதுகாப்புக்காக கூடுதலாக போலீஸார் நியமிக்கப்பட்டு குற்றத்தடுப்புடன், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்த்துக் கொண்டனர்.

பொதுமக்களுக்கு உதவிட, சேவை மையங்கள் மூலம் பணி செய்துவரும் காவல் அதிகாரிகள், போலீஸாரின் பணிகளைப் பார்வையிட்டு, பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்கும் தீபாவளி வாழ்த்துகளைக் காவல் ஆணையர் தெரிவித்தார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றி, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

அதேபோல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் அதிகாரிகள், போலீஸார், ஆட்டோ ஓட்டுநர்களை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துப் பொதுமக்கள், காவல் துறையினருக்கு இனிப்புகள் வழங்கினார்.

தி.நகர் பகுதிக்குச் சென்று பாதுகாப்புப் பணியினைப் பார்வையிட்டு போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வின்போது இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தீபாவளி நாளான இன்று (14.11.2020) காலை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்குக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையாளர்கள் விமலா, ஶ்ரீதர்பாபு, ஆயுதப்படை துணை ஆணையர்கள் சௌந்தர்ராஜன், ரவிச்சந்திரன், காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x