Published : 12 Nov 2020 06:22 PM
Last Updated : 12 Nov 2020 06:22 PM
மேட்டூரை அடுத்த பாலமலை கிராமத்தில் மக்களில் சிலருக்கு டெங்கு, எலிக் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கு சுகாதாரத் துறையினர் முகாமிட்டு, சிகிச்சைப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள மலைக் கிராமம் பாலமலை. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மக்களில் சிலருக்குக் கரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய, சுகாதாரத் துறை சார்பில் 20 நபர்களுக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எவருக்கும், கரோனா தொற்று கண்டறியப்படவில்லை.
ஆனால், அவர்களில் 11 பேருக்கு டெங்கு அறிகுறிகள் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், சில நபர்களுக்கு டெங்கு வைரஸ் பாதிப்புடன், எலிக் காய்ச்சல், மலேரியா பாதிப்புகள் இருந்ததும் கண்டறியப்பட்டது. குறிப்பாக, ஒரே நபருக்கு டெங்கு, எலிக் காய்ச்சல், மலேரியா ஆகிய பாதிப்புகள் இருந்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து, சுகாதாரத் துறை சார்பில் இரு மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மலேரியா ஒழிப்புப் பணியாளர்கள் என 8 பேர் அடங்கிய குழு, பாலமலை கிராமத்தில் முகாமிட்டு, சுகாதாரம் மற்றும் சிகிச்சைப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "பாலமலை கிராமத்தில், கரோனா தொற்று குறித்த பரிசோதனை 'ரேண்டம்' முறையில் எடுக்கப்பட்டபோது, அங்கு சிலருக்கு டெங்கு, எலிக் காய்ச்சல், மலேரியா பாதிப்புகள் இருந்தது முதல் கட்டப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனினும், பாதிக்கப்பட்ட நபர்கள் எவருக்கும் காய்ச்சல் உள்பட எந்த அறிகுறியும் இல்லை.
எனினும், அடுத்தகட்டப் பரிசோதனைகளுக்குப் பின்னர், தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது, கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் முன்னெச்சரிக்கை மருந்துகள் வழங்கவும், கிராமத்தில் நீர் மாதிரிப் பரிசோதனை, கொசு ஒழிப்புப் பணி என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்றனர்.
இதனிடையே, பாலமலை கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்லும் கண்ணாமூச்சி கிராமத்திலும் டெங்கு பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த காரிப்பட்டியிலும் கரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தியதில், ஒருவருக்கு டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அங்கும் சுகாதாரத் துறை சார்பில் டெங்கு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment