Last Updated : 05 Nov, 2020 04:14 PM

 

Published : 05 Nov 2020 04:14 PM
Last Updated : 05 Nov 2020 04:14 PM

30 சதவீதம் போனஸ், கடைகளின் வேலை நேர மாற்றம்; டாஸ்மாக் பணியாளர்கள் வலியுறுத்தல்

தங்களுக்கு 30 சதவீத போனஸ் வழங்குவதுடன், டாஸ்மாக் கடைகளின் வேலை நேரத்தை மாற்ற வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளருக்குக் கிடைக்கச் செய்யும் வகையில், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் இன்று (நவ. 5) கோரிக்கை மனு அளித்தனர்.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.முருகானந்தம், மாவட்ட நிர்வாகிகள் எம்.பிச்சைமுத்து, என்.கண்ணன், வி.வெங்கடேசன், டி.சுப்பிரமணி, பி.வடிவேல், ஆர்ஆர்.செல்வம் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

அந்த மனு விவரம்:

"கடந்த 27 ஆண்டுகளாக டாஸ்மாக் துறையில் குறைந்த தொகுப்பூதியத்தில் 27 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அரசின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு கரோனா நோய்த் தொற்று காலத்திலும் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகிறோம்.

ஆனால், உயர்ந்து வரும் விலைவாசியால் குறைந்த தொகுப்பூதியத்தைக் கொண்டு குடும்பச் செலவினங்களை மேற்கொள்ள முடியவில்லை. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 40 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், 20 சதவீதம் போனஸ் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், நிகழாண்டு 10 சதவீதம் மட்டுமே போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த டாஸ்மாக் பணியாளர்களுக்கும் மிகவும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. எனவே, டாஸ்மாக் பணியாளர்களுக்கு வரையறைகளைத் தளர்த்தி 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.

டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளின் வேலை நேரம் காலை 10 முதல் இரவு 8 மணி வரை செயல்படுத்தப்பட்ட காலத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் வழிப்பறி உட்பட சமூக விரோதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் குறைந்திருந்தன. எனவே, டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளின் வேலை நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்".

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x