Last Updated : 02 Nov, 2020 04:53 PM

 

Published : 02 Nov 2020 04:53 PM
Last Updated : 02 Nov 2020 04:53 PM

நாகர்கோவிலில் இரு குழந்தைகளைக் கொன்று பெண் தீக்குளித்து தற்கொலை: கணவர் இறந்த ஓராண்டிற்குப் பின்பு சோக முடிவு

நாகர்கோவிலில் கணவர் இறந்து ஓராண்டு ஆன நிலையில் குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்து விட்டு பெண தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நார்கோவில் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் ராமதாஸ் என்பவரின் மகன் ரஞ்சித்குமார்(32). மருத்துவ பிரதிநிதியாக இருந்து வந்தார். இவரது மனைவி ராசி(28). இவர்களுக்கு அட்சயா(5), அனியா(3) என்ற இரு குழந்தைகள் இருந்தன.

ரஞ்சித்குமார் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்து போனார். ரஞ்சித்குமாரின் மரணத்திற்கு பின்பு ராசியையும், இரு குழந்தைகளையும் அவரது தந்தை ராமதாசும், தாயார் சந்திராவுமே கவனித்து வந்துள்ளனர். கூலி வேலையின் மூலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் சிரமத்துடன் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ரஞ்சித்குமார் இறந்த ஓராண்டு நினைவு நாளை வீட்டில் கடைபிடித்துள்ளனர். அவரது படத்திற்கு உறவினர்களும், நண்பர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை வீட்டில் குழந்தைகள் அட்சயா, அனிதா ஆகியோர் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். குளியல் அறையில் உடல் கருகிய நிலையில் ராசி இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமதாசும், அவரது மனைவியும் கதறி அழுதவாறு நேசமணிநகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

நாகர்கோவில் டி.எஸ்.பி. வேணுகோபால், இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, மற்றும் போலீஸார் தாய், மற்றும் குழந்தைகள் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீஸார் வீட்டின் அறைகளை ஆய்வு செய்தனர். உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது படுக்கை அறையில் கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதை மரணத்திற்கு முன்பு ராசி எழுதி வைத்திருப்பது தெரியவந்தது.

கடிதத்தில், கணவர் இறந்து ஓராண்டாகியும் மனம் உடைந்து வாழ்ந்த நிலையில் சோகத்தில் இருந்து மீளமுடியவில்லை. என்னால் இனியும் இப்படியொரு வாழ்க்கை வாழமுடியாது. நானும், குழந்தைகளும் தூக்க மாத்திரை சாப்பிட்டோம். என்னையும், குழந்தைகளையும் என் கணவரிடமே நல்லபடியா அனுப்பி வையுங்க. என் போனில் வீடியோவையும் எடுத்து வைத்துள்ளேன் பாருங்கள். மன்னித்து விடுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ராசி தற்கொலைக்கு முன்பு எடுத்துள்ள வீடியோவில்; எனது பெற்றோரை விடவும் எனது கணவரின் குடும்பத்தினர் என்னையும், குழந்தைகளையும் நன்கு பார்த்து கொண்டனர். அனைவரும் மன்னித்து விடுங்கள் எனப் பேசியுள்ளார்.

போலீஸார் நடத்திய விசாரணையில், அதிகமான தூக்க மாத்திரைகளை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தானும் தின்ற ராசி குழந்தைகள் இறந்த பின்பு, உயிர் பிழைத்து விடக்கூடாது எனக் கருதி வீட்டிற்கு வர்ணம் அடிப்பதற்காக வாங்கியதில் மீதம் இருந்த வார்னிஸை தனது உடலில் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து நேசமணிநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாகர்கோவிலில் சோகத்தை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x