Published : 17 Oct 2020 01:07 PM
Last Updated : 17 Oct 2020 01:07 PM
அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் 100-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நெட்டித் தண்டில் தயாரிக்கப்படும் கோயில் மாதிரி வடிவம் காட்சிக்காக வைக்கப்பட்டது.
பிரபல திருக்கோயில்களில் அதன் முழு மாதிரி வடிவம் நெட்டி தண்டில் தயாரித்து கண்ணாடி பெட்டியில் காட்சிபடுத்தப்பட்டிருக்கும். இக்கலை உலக அளவில் தமிழகத்தில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மற்றும் கும்பகோணத்தில் உள்ள 8 பேர் மட்டுமே இத்தொழில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டியில் உள்ள அருள்மிகு ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோயிலில் 100-வது ஆண்டை முன்னிட்டு சுமார் ரூ.1 லட்சம் செலவில் நெட்டியில் தயாரிக்கப்பட்ட கோயில் மாதிரி வடிவம் வைக்கப்பட்டது.
இந்த மாதிரி வடிவத்தை புதுக்கோட்டையைச் சேர்ந்த பாலுமணி (58) தயாரித்து வழங்கியுள்ளார்.
இதற்கான செலவை புகைப்பட கலைஞர்கள் இருவர் ஏற்றனர்.
இதுகுறித்து கலைஞர் பாலுமணி கூறுகையில், நெட்டி தாமரைக் குளத்தில் கிடைக்கும் ஒருவகை தண்டு. எடை இல்லாதது. பார்ப்பதற்கு தெர்மாகோல் போன்று இருக்கும். 50 ஆண்டுகளுக்கு முன் பல்லக்கு, நெத்திச்சூடி போன்றவை தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது நெட்டி தயாரிப்புகள் கலைப் பொருளாக மாறியுள்ளன. உலகத்திலேயே நெட்டி வேலைப்பாடு தமிழகத்தில் மட்டுமே செய்யப்படுகிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், சுவாமிமலை முருகன்கோயில், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை, திருவேற்காடு, மாங்காடு, காலகஸ்தி உள்பட பல்வேறு கோயில்களுக்கு மாதிரி செய்து கொடுத்துளேன்.
இந்த நெட்டி வேலைப்பாடு யானை தந்தம் போன்று இருக்கும். நிறம் மாறாது. பழுப்பு நிறத்திலேயே நீடித்து இருக்கும். கெட்டுப்போகாது. கண்ணாடி பேழையில் வைத்தால் 500 ஆண்டுகளானாலும் அப்படியே இருக்கும். தமிழகத்தில் 8 பேர் மட்டுமே இத்தொழில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment