Published : 12 Oct 2020 04:56 PM
Last Updated : 12 Oct 2020 04:56 PM

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று காக்கிநாடா அருகே நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை (13.10.2020) அதிகாலை காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும். இதனால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

“மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை (13.10.2020) அதிகாலை காக்கிநாடா அருகே கரையைக் கடக்கக்கூடும்.

இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, காஞ்சிபுரம் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

மாமல்லபுரம் (செங்கல்பட்டு), பெரியாறு (தேனி), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) தலா 3 செ.மீ., சின்னக்கல்லாறு (கோவை), காஞ்சிபுரம், உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), சோளிங்கர் (ராணிப்பேட்டை ) தலா 2 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அக்டோபர் 12 (இன்று) மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, மற்றும் ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அக்டோபர் 12 (இன்று) வடமேற்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதி, மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அக்டோபர் 12,13 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 12,13 ஆகிய தேதிகளில் கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 13 முதல் அக்டோபர் 15 வரை அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,

கடல் உயர் அலை முன்னறிவிப்பு :

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை அக்டோபர் 13 இரவு 11:30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 3.2 முதல் 3.8 மீட்டர் வரையிலும் , வட தமிழக கடலோரம் கலிமார் முதல் புலிக்காட் வரை கடல் அலைகளின் உயரம் 2.0 முதல் 3.8 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x