Published : 12 Oct 2020 12:39 PM
Last Updated : 12 Oct 2020 12:39 PM
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் கூட்டம் அக்.14-ல் கூடுவதாக டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் மக்கள் அபிமானத்தைப் பெற்று ஆட்சியைப் பிடிக்க பெரிதும் பயன்படுவது தேர்தல் அறிக்கையே. அதை வைத்துதான் தேர்தல் பிரச்சாரமே நடக்கும். தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் ஆட்சிக்கு வரத்துடிக்கும் கட்சிக்கும், ஆட்சியில் தொடரத் துடிக்கும் கட்சிக்கும் பெரிய போட்டி இருக்கும்.
அக்கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மிகவும் கவனம் செலுத்தும். அந்த வகையில் திமுக முந்திக்கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுவை அமைத்துள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினர்களை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
அதன்படி தேர்தல் தயாரிப்புக் குழுவில் உள்ளவர்கள் விவரம்:
1. டி.ஆர்.பாலு, (பொருளாளர்), 2. சுப்புலட்சுமி ஜெகதீசன் (துணைப் பொதுச்செயலாளர்), 3. ஆ.ராசா (துணைப் பொதுச்செயலாளர்), 4. அந்தியூர் ப.செல்வராஜ் (துணைப் பொதுச்செயலாளர்), 5. கனிமொழி, எம்.பி.,(திமுக மக்களவைக் குழு துணைத் தலைவர்), 6. திருச்சி சிவா, எம்.பி. (கொள்கைப் பரப்புச் செயலாளர்), 7. டிகேஎஸ் இளங்கோவன், எம்.பி. (செய்தித் தொடர்புச் செயலாளர்), 8.பேராசிரியர் அ.ராமசாமி.
இந்நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் கூட்டம் குறித்த அறிவிப்பை அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பு:
“திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம் வருகிற அக்டோபர் 14 புதன்கிழமை காலை 9 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில்’ நடைபெறும்.
அதுபோது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்”.
இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொருள் குறித்தும், பிரதான விஷயம் குறித்தும், தேர்தல் அறிக்கை தயாரிக்க வெளியிலிருந்து நிபுணர்கள், ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டோர் ஆலோசனையைப் பெறுவது, பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...