Published : 08 Oct 2020 12:27 PM
Last Updated : 08 Oct 2020 12:27 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி குடியிருப்புப் பகுதியில் பாதாளச் சாக்கடை மெகா பள்ளத்தால் அடிக்கடி விபத்து நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காரைக்குடி நகராட்சியில் 2017-ம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ112.5 கோடியில் பாதாள சாக்கடை பணி தொடங்கியது.
இத்திட்டத்தில் 36 வார்டுகளிலும் 155 கி.மீ-க்கு குழாய்கள் பதித்து, 5,559 ஆள் நூழைவு தொட்டிகள் (மேன்ஹோல்கள்) அமைக்கப்பட வேண்டும்.
இப்பணி 2020-ம் ஆண்டு மார்ச்சில் முடிந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை பாதியளவு பணிகூட முடிவடையவில்லை. மேலும் சாலையின் நடுவே ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் கூட மூடப்படாமல் உள்ளது.
இந்நிலையில் இருவாரங்களுக்கு முன்பு வைத்தியலிங்கம்புரத்தில் பாதாளச் சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
பள்ளத்தில் ஊற்றுநீர் வெளியேறியதால் பள்ளம் முழுவதும் தண்ணீரால் நிரம்பியது. இதனால் பொக்லைன் இயந்திரத்தை அப்படியே விட்டுச் சென்றனர்.
மேலும் இந்த பள்ளத்தால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து புகார் கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து வைத்தியலிங்கபுரம் தேவி கூறுகையில், ‘‘குடியிருப்பு பகுதிளில் தோண்டிய பள்ளத்தை மூடாமல் அப்படியே சென்றுவிட்டனர். இதில் குழந்தைகள் விழுந்துவிடுமோ என்ற அச்சத்துடன் இருந்து வருகிறோம்.
பள்ளத்தில் இரும்புக் கம்பிகள் நீட்டியபடி உள்ளன. குடிநீர் குழாய் உடைப்பையும் சரிசெய்து கொடுக்கவில்லை. பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது,’’ என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment