Last Updated : 04 Oct, 2020 02:54 PM

 

Published : 04 Oct 2020 02:54 PM
Last Updated : 04 Oct 2020 02:54 PM

புதுவை மதுபான ஆலைகளில் முறைகேடு; சிபிஐ விசாரணைக்கு கிரண்பேடி பரிந்துரை

கிரண்பேடி: கோப்புப்படம்

புதுச்சேரி

புதுவை மதுபான ஆலைகளில் தயாரான மதுபாட்டில்களில் போலி ஹாலோகிராம் ஒட்டிய முறைகேட்டால் நிகழ்ந்த வரி ஏய்ப்பு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பரிந்துரை செய்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலை தடுத்திட கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலானது. இந்த ஊரடங்கு காலத்தில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி புதுவையில் மது விற்பனை நடைபெற்றது. இது பற்றி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின் பேரில் எஸ்.எஸ்.பி ராகுல் அல்வால் தலைமையிலான குழுவினர் மதுக்கடைகளின் இருப்பு விவரங்களை ஆய்வு செய்தனர்.

அதில் இருப்பு குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டு 100 கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. கலால்துறை ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டார். மது விற்பனைக்கு உடந்தையாக இருந்த தாசில்தார் மற்றும் காவல் துறையினர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், முதல்வர் நாராயணசாமி மது விற்பனை சிறப்பு விசாரணைக் குழுவை கலைத்து உத்தரவிட்டார். கள்ளச்சந்தையில் மது விற்பனையில் மாநிலத்தின் வருவாய் இழப்பு அதிக அளவு ஏற்பட்டது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

இந்த நிலையில், புதுவையில் இயங்கிவரும் மதுபான ஆலைகளில் தயாரான மதுபாட்டில்களில் போலி ஹாலோகிராம் தயாரித்து ஒட்டி, மதுவிற்பனை செய்து அரசுக்கு பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, 2 தனியார் மதுபான ஆலைகளுக்குக் கலால் துறையினர் சீல் வைத்துள்ளனர்.

மேலும், வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டி அதிமுக எம்எல்ஏ அன்பழகன் கிரண்பேடியிடம் மனு அளித்தார். மேலும், கலால் துறை நடத்திய ஆய்வில் மதுபான ஆலைகளில் நடைபெற்ற பல முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தது.

இதுதொடர்பாக, ஆய்வறிக்கையை கலால்துறை, ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பியது. அதனை ஆய்வு செய்த கிரண்பேடி, மதுபான ஆலை மோசடிகளை சிபிஐ விசாரிக்க பரிந்துரை செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x