Published : 29 Sep 2020 02:35 PM
Last Updated : 29 Sep 2020 02:35 PM

அதிமுக ஆட்சியில் எந்தக் குழப்பமும் இல்லை; மீண்டும் ஆட்சி அமைப்போம்: ஓபிஎஸ் உடனான சந்திப்புக்குப் பிறகு வைத்திலிங்கம் பேட்டி

வைத்திலிங்கம்: கோப்புப்படம்

சென்னை

அதிமுக ஆட்சியில் எந்தக் குழப்பமும் இல்லை என, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று (செப். 28) நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதல்வர் வேட்பாளரை இப்போதே அறிவிக்க வேண்டும் என, மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் முதல்வர் பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே நேரடியாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, முதல்வரும் துணை முதல்வரும் சேர்ந்து அக். 7 அன்று அறிவிப்பார்கள் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில், தன் ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று (செப். 29) ஆலோசனை நடத்தினார். இதில், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அக். 7 முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு, வழிகாட்டுதல் குழு அமைத்தல், அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையில் ஓபிஎஸ் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், "இது தனிப்பட்ட சந்திப்பு. கே.பி.முனுசாமியும் தனிப்பட்ட ரீதியில் துணை முதல்வரைச் சந்தித்துள்ளார். இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இல்லை. முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக். 7-ம் தேதி பார்த்துக்கொள்ளலாம்.

அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பதற்குத்தான் என்னுடைய ஆதரவு. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உறுதுணையாக இருப்பேன். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவருக்கும் ஆதரவாக இருப்பேன்" எனத் தெரிவித்தார்.

அப்போது, முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் அதிமுக ஆட்சி கலைக்கப்படுமா என, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வைத்திலிங்கம், "எந்தக் குழப்பமும் இல்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x