Published : 16 Sep 2020 03:33 PM
Last Updated : 16 Sep 2020 03:33 PM
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதியில் வளிமண்டல சுழற்சியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பு வருமாறு:
“ ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது தற்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதியில் வளிமண்டல சுழற்சியாக நீடிக்கின்றது.
இதன் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும், சென்னை மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:
பந்தலூர் (நீலகிரி ) 5 செ.மீ, கும்மிடிபூண்டி (திருவள்ளூர்), ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) தலா 4 செ.மீ, சங்கரிதுர்க் (சேலம்), அவிநாசி (திருப்பூர்) தலா 3 செ.மீ, காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை ), சிட்டம்பட்டி (மதுரை ), சோலையார் (கோவை ) தலா 2 செ.மீ,
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
செப்டம்பர் 18 அன்று மன்னார் வளைகுடா, தென்மேற்கு, தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
செப்டம்பர் 19 அன்று தென்மேற்கு, தென்கிழக்கு, மத்தியகிழக்கு வங்ககடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 20 வரை கேரளா ,கர்நாடகா, லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
செப்டம்பர் 20 வட கிழக்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் உயர்அலை முன்னறிவிப்பு:
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை செப்.17 இரவு 11.30 மணி வரை கடல் உயர்அலை 3.0 முதல் 3.8 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment