Published : 05 Sep 2020 05:00 PM
Last Updated : 05 Sep 2020 05:00 PM

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச் சலனம்; தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக வேலூர், கள்ளக்குறிச்சி ,விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், கடலூர், பெரம்பலுர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

கனமழை எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 48 (செப். 05/06 ) மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்

உசிலம்பட்டி (மதுரை) 13 செ.மீ., தேவலா (நீலகிரி), குப்பணம்பட்டி (மதுரை) தலா 9 செ.மீ., சிவகங்கை (சிவகங்கை), ஒகேனக்கல் (தருமபுரி), இடையப்பட்டி (மதுரை), கிருஷ்ணராயபுரம் (கரூர் ) தலா 8 செ.மீ., பெரியகுளம் (தேனி), சின்னக்கல்லாறு (கோவை), கொடநாடு (நீலகிரி) தலா 7 செ.மீ., வால்பாறை PAP (கோவை), வால்பாறை வட்டார அலுவலகம் (கோவை), மாயனுர் (கரூர் ) தலா 6 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 5, 6 தேதிகளில் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 5, 6 தேதிகளில் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 6,7 தேதிகளில் தெற்கு கேரள கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 6, 8, 9 தேதிகளில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர் அலை முன்னறிவிப்பு

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை செப். 6 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 3.0 முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x