Published : 04 Sep 2020 03:36 PM
Last Updated : 04 Sep 2020 03:36 PM

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி எதிர்க்கட்சிகளின் பொய் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதிலடி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 

மதுரை

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி எதிர்க்கட்சிகளின் பொய் குற்றச்சாட்டுக்கு சரியான பதிலடியை முதல்வர் கொடுத்துள்ளார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கப்பலூர் வேளாண்மை வாணிபக் கழகத்தில் உள்ள நெல்கொள்முதல் கிடங்குகளை அமைச்சர் ஆர் பி உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் வினய், மண்டல இயக்குனர் புகாரி, தரக்கட்டுப்பாட்டு அதிகாரி இஸ்மாயில் ஆகியோர் உடன் இருந்தனர்

பின்னர் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது :

விவசாயிகள் வாழ்வில் ஒளி ஏற்றும் வகையிலும் இன்றைக்கு வேளாண்மை துறைக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் வழங்கி வருகிறார் அவருக்கு உறுதுணையாக துணை முதல்வர் இருந்தது வருகிறார்

அதனால்தான் தமிழகத்தில் கடந்த ஆண்டு நெல் 23 லட்சம் மெட்ரிக்டன் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது இந்த ஆண்டிற்கு 28 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு கூடுதலாக 5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது

தற்போது பருவமழை பெய்து வருவதால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் ஆணைக்கிணங்க தற்போது இந்த நெல் கிடங்குளை ஆய்வு செய்தோம் மழைக்காலங்களில் எப்படி இந்த நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 47,478 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு 87 கோடிக்கு மேல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

அதேபோல் இந்த ஆண்டில் 90,031 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 171 கோடிக்கு மேல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

ஆகக் கூடுதலாக 42,553 மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு 84 கோடிக்குமேல் விவசாயி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது

தமிழக தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வண்ணம் தமிழகத்தின் சாமானிய முதல்வர் எடப்பாடியார் தலைமையில் இயங்கும் அம்மாவின் அரசு பல்வேறு நலத்திட்டங்களை எடுத்து வருவதை நாம் அறிவோம்

கரோனா காலங்களில் கூட இதுவரை 41 புதிய தொழில் திட்டங்களை தொடர்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டு சுமார் 30,500 கோடி ரூபாய் முதலீட்டில் 67,200 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி சரித்திர சாதனை படைத்துள்ளார் முதல்வர்.

இந்த நடவடிக்கையால் ஏப்ரல் முதல் ஜூன் வரை புதிய முதலீடுகளை ஈர்த்து இந்தியாவிலேயே வேலைவாய்ப்பு உருவாக்குவதில் தமிழகம் முதன்மையாக திகழ்கிறது இது.

முதல்வரின் அயராத உழைப்பிற்குக் கிடைத்த பரிசாகவும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளைக் களைய 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வெளிமாநிலத் தொழிலாளர்களை பணியமர்த்த தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் வழிகாட்டியுள்ளார்

முதல்வர் தலைமையில் மாநில மற்றும் மாவட்ட வங்கிக்கான கூட்டங்கள் நடத்தி உடனுக்குடன் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க அதிமுக அரசு வலியுறுத்தியதால் மத்திய அரசு கடன் திட்டத்தின் மூலம் 7,000 கோடி ரூபாய்க்கான ஒப்புதலை பெற்று இந்தியாவில் தமிழகம் முதன்மை வகிக்கிறது. இது முதல்வரின் மதிநுட்பம் மற்றும் மணிமகுடமாகும்.

அதிமுக அரசு அறிவித்த திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன இந்த காலத்திலும் அரசின் கடுமையான முயற்சியின் காரணமாக அதிக முதலீட்டை ஈர்த்து சுமார் 42 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு தமிழகத்தில் தான் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன

அதே போல் இந்திய அளவில் ஜி.டி.பி. 4 சகவீதம் உள்ளது தமிழகத்தில் ஜி.டி.பி. சதவீதம் 8 சதவீதம் உயர்ந்துள்ளது

தமிழகத்தில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக பொய்ப் பிரச்சாரம் செய்த எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்

எதிர்க்கட்சிகளின் இடைவிடாத பொய்ப் பிரச்சாரத்திற்கு மாறாக கரோனா பேரிடர் காலத்திற்கு முந்தைய பிப்ரவரியில் 8.3 சகவீதம் நிலைக்குக் கீழாக வேலையின்மை விகிதம் 2.6 சதவீதமாக குறைந்துள்ளது.

இன்னும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும் என்று முதலல்வர் தெரிவித்துள்ளார். அவருக்கு உறுதுணையாக துணை முதல்வர் இருந்து வருகிறார்

தொழில்துறை வேளாண் துறை வருவாய் துறை கல்வித் துறை உள்ளாட்சி துறை மின்சாரத் துறை நெடுஞ்சாலை துறை இப்படி அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருவதை இன்று எதிர்க்கட்சிகள் குற்றம் கூறுவதே தங்கள் வாழ்நாள் கடமையாக செயல்பட்டு வருகின்றனர்.

அவர்கள் குற்றம் சொல்வது மூலம் அவர்களுக்கு மக்களிடத்தில் பின்னடைவுதான் ஏற்படும் இவர்கள் மக்களுக்கு ஆக்கப்பூர்வமான கருத்தை ஒருநாளும் கூறியது கிடையாது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்

வேலைவாய்ப்பு இல்லை என்று தமிழக எதிர்க்கட்சிகள் கூறினர். ஆனால் இன்றைக்கு அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் வேலை வாய்ப்பு அதிகம் என்று நமது முதல்வர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்

முதல்வரின் சாதனைத் திட்டங்களை எடுத்துக்கூறி எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரங்களை மக்களிடத்தில் தோலுரித்து காட்டுவோம் .

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x