Published : 16 Aug 2020 11:32 AM
Last Updated : 16 Aug 2020 11:32 AM

மதுரை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடு: ஒருங்கிணைந்த காவல் நிலையம் அமைக்கப்படுமா?

மதுரை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையின் 3 மருத்துவப் பிரிவு கட்டிடங்களையும் சேர்த்து கண்காணிக்கும் வகையில் ஒருங் கிணைந்த மருத்துவமனை காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையின் அனைத்து மருத்துவப் பிரிவுகளும் ஒரே வளாகத்துக்குள் இல்லாமல், கோரிப்பாளையம் பழைய மருத்துவப் பிரிவு கட்டிடம், அண்ணா பஸ்நிலைய புதிய மருத்துவப் பிரிவு கட்டிடம், மருத்துவக் கல்லூரி மைதானத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என மூன்று இடங்களில் உள்ளன.

மருத்துவமனை பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் வழக்கு விசாரணைகளுக்கு கோரிப் பாளையம் பழைய மருத்துவப் பிரிவு கட்டிடத்தில் தனி காவல் நிலையம் செயல்படுகிறது. இந்த மருத்துவப் பிரிவு கட்டிடத்தில் நடைபெறும் பிரச்சினைகள் குறித்து இங்கு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது. இங்கு 45 போலீஸ் பணியிடங்கள் உள்ள நிலையில், தற்போது 2 நேரடி எஸ்.ஐ.க்கள், 6 சிறப்பு எஸ்.ஐ.க்கள் மற்றும் 25 போலீஸார் மட்டுமே பணிபுரிகின்றனர். இந்த காவல்நிலையத்துக்கான பொறுப்பு இன்ஸ்பெக்டராக மதிச்சியம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் உள்ளார். இதனால் மருத்துவமனை காவல்நிலைய போலீஸாரில் பெரும்பாலானோர் மாற்றுப்பணி என்ற அடிப்படையில் மதிச்சியம் காவல்நிலையப் பணிகளில் ஈடு படுத்தப்படுகிறார்கள். இதனால் மருத்துவமனை கண்காணிப்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அண்ணா பஸ்நிலைய புது மருத்துவப் பிரிவு கட்டிடம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவை மதிச்சியம் காவல்நிலையத்தின் எல்லைக்குள் இருப்பதால், அதன் கட்டுப்பாட்டில் உள்ளன. அதனால், ராஜாஜி மருத்துவ மனை காவல்நிலைய போலீஸார் நேரடியாக அண்ணா பஸ்நிலைய மருத்துவப் பிரிவு கட்டிடத்தையும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையையும் கண்காணிப்ப தில்லை.

ஒரே அரசு மருத்துவமனையின் வெவ்வேறு மருத்துவ பிரிவு கட்டிடங்கள் 2 காவல்நிலையங் களின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், மருத்துவமனை காவல்நிலைய போலீஸார் மாற்றுப் பணிக்கு அனுப்பப்படுவதாலும் திருட்டுச் சம்பவங்களை தடுக்க முடிய வில்லை. நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தொடர் பான பிரச்சினைகள் குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

இதுபோன்ற பாதுகாப்பு குறை பாடு காரணமாக கடந்த மாதம் அண்ணா பஸ்நிலைய புது மருத்துவப் பிரிவு கட்டிடத்தில் 4 பேர் கொண்ட கும்பல், மருத்துவமனை வார்டுக்குள் புகுந்து நோயாளியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்தது. அங்கு திருட்டுச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

எனவே, 3 மருத்துவப் பிரிவு கட்டிடங்களையும் சேர்த்து கண்காணிக்கும் வகையில் ஒருங்கிணைந்த மருத்துவமனை காவல்நிலையம் ஏற்படுத்த வேண்டும். போதிய போலீஸாரை நியமிப்பதுடன், அவர்களை மாற்றுப்பணிக்கு அனுப்பாமல் மருத்துவமனை கண்காணிப்புப் பணியில் மட்டுமே ஈடுபடுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மதிச்சியம் போலீ ஸார் கூறுகையில், தற்போது சுழற்சி முறையில் தினமும் 2 காவலரை அண்ணா பஸ்நிலைய புது மருத்துவ பிரிவை கண்காணிக்க அனுப்பி வருகிறோம் என்றனர். ஒய்.ஆண்டனி செல்வராஜ்


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x